Saturday, November 3, 2012

Tamil Bhagavad Gita Chapter - 04



Tamil Bhagavad Gita Chapter - 04


 ஸ்ரீ மத் பகவத்கீதைமூன்றாம் அத்தியாயம் 


Tamil Srimad Bhagavad Gita Chapter - 4 





கர்ம யோகம்



அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன். பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.

ஞானகுரு சிஷ்ய பரம்பரை 1-3 -அவதார மூர்த்தியின் மஹிமை 4-9 -ஞானயோகத்தின் சிறப்பு 10-எல்லா மார்க்கங்களும் இறைவனைப் போய்ச் சேர்கின்றன 11- சிறு தேவதைகளின் வழிபாட்டின் பயன் 12-நான்கு வர்ணமும் கர்மமும் 13-15 -கர்ம தத்துவம் 16-22 -விதவிதமான யக்ஞங்கள் 23-33 -குரு சிஷ்ய இணக்கம் 34 -ஞானத்தின் உயர்வு 35-39 -சந்தேகம் உதவாது 40-42.

ஸ்ரீ பகவாநுவாச

1. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்ரவீத்

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், இமம் அவ்யயம் யோகம்-இந்த அழிவற்ற யோகத்தை, அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்-நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
விவஸ்வாந் மநவே ப்ராஹ-விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான், மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்-மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.

இந்த யோகத்தால் அடையப்படுவது அழிவற்ற வீடுபேறு ஆதலால் அதற்குச் சாதனமாயிருக்கும் யோகமே அழிவற்றது எனப்படுகிறது. முக்தியடைதற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் முயற்சி சர்வகாலமும் நிலவுலகில் இருக்கும். அதற்கு ஏதுவாயுள்ள இந்த யோகத்தின் அனுஷ்டானமும் என்றென்றும் நிலைத்திருக்கும். விவஸ்வான் என்பது சூரியனுடைய பெயர். மனு என்பவர் ஸ்மிருதியை இயற்றியவர். அவர் தம் புதல்வனும் சூரியகுலத்து முதல் அரசனுமாகிய இக்ஷ்வாகுவுக்கு அதைப் புகட்டினார். அதை அனுஷ்டிப்பவர்களுக்கு இகபரமிரண்டையும் பெறுதற்கான வலிவு வந்தமைகிறது. உலகத்தைக் காக்கும் பொறுப்புடையவர்களுக்கு அத்தகைய பலம் இன்றியமையாதது.

2. ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப

பரந்தப-எதிரிகளை எரிப்பவனே ! ஏவம் பரம்பராப்ராப்தம்-இவ்விதம் வழிவழியாக வந்த
இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர், ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகுகாலமாக, ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.

பொருள் : இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.

வழிமுறை வழிமுறையாக அரசர்கள் இந்த யோகத்தைக் கடைப்பிடித்து அதன்படி சிறப்படைந்துவந்தார்கள். நாளடைவில் தக்கார் குறைந்து, தகவிலர் மலிந்துவர யோகமும் பழுதுபட்டுப் போயிற்று.

நல்ல மனிதர் இல்லாத காலத்தில் நல்ல திட்டம் எதுவும் தலையெடுக்காது என்பது வெளியாயிற்று. நிழல் மனிதனைத் தொடர்ந்து வருவதுபோன்று நல்லாரைத் தொடர்ந்தே நல்ல திட்டம் வருகிறது. அதை பகவான் இங்ஙனம் நிரூபிக்கிறார்.

3. ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதந:
பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்

மே பக்த: ஸகா ச அஸி-என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய், இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக:-ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை, அத்ய மயா தே ப்ரோக்த:-இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது, ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம்-ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது.

பொருள் : அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.

இரஹஸ்யம் அல்லது மறை என்பது மற்றவர்களுக்குத் தெரியாது ஒளித்து வைப்பதாம். பலர் சுயநலம் கருதியே அதை வேறு யாருக்கும் தெரியாது மூடி வைக்கின்றனர். மனிதனை மேலோன் ஆக்குகின்ற இந்த யோகமானது அப்படி சுயநலம் கருதி மறைத்து வைக்கப்படுவதன்று. தகுதியில்லார்க்கு இது என்றைக்கும் மறைபொருள். ஏற்கனவே இயம்பியபடி காலாந்தரத்தில் இது மறைதற்குக் காரணம் இதைக் கையாளவல்ல மேன்மக்கள் இல்லாது போய்விடுவதேயாம். இன்று அதைப் பெற வல்லவனாய் நீ வந்துள்ளாய்; அந்த யோகமும் உன் பொருட்டு வெளிப்படுவதாயிற்று என்பது பகவானது கருத்து. ஒரு மனிதன் எதற்குத் தகுதியுடையவனாகத் தன்னைச் செய்து கொள்கிறானோ அதனை இயற்கை வலியக் கொண்டுவந்து அவனுக்குத் தக்க தருணத்தில் கொடுத்துதவுகிறது.

இங்கு அர்ஜுனனுக்கு இயல்பாக ஒரு சந்தேகம் வருகிறது:

அர்ஜுந உவாச

4. அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், பவத: ஜந்ம அபரம்-உன் பிறப்பு பிந்தியது
விவஸ்வத: ஜந்ம பரம்-விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது, த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி-நீ இதை ஆதியில் சொன்னவனென்று, ஏதத் கதம் விஜாநீயாம்-நான் தெரிந்துகொள்வதெப்படி?

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?

இக்காலத்தில் வசுதேவருக்குப் புதல்வராகப் பிறந்தவர் நீர். விவஸ்வானோ இச்சிருஷ்டித் துவக்கத்தில் தோன்றியவர். பல் காலம் முன் இருந்தவர்க்குப் பல்காலம் பின் வந்தவர் புகட்டுதல் எப்படிச் சாத்தியமாகும் என்பது கேள்வி.

ஸ்ரீபகவாநுவாச

5. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பரந்தப அர்ஜுந-அர்ஜுனா, மே தவ ச-எனக்கும் உனக்கும், பஹூநி ஜந்மாநி வ்யதீதாநி-பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன, 
தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த-அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய், அஹம் வேத-நான் அறிவேன்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை. கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும். அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார். ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும். வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார். இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.

ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை. பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:

6. அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா

அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும், பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று, ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.

பொருள் : ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு பிறக்கிறார்கள். ஈசுவரனுக்கு அடிமைத்தொழில் புரிகிறது பிரகிருதி. பிறவாத அவன் பிறப்பவனாகவும், வளர்பவனாகவும் தன்னைக் காட்டிக்கொள்ளுதல் தனக்கு அடிமைப்பட்டுள்ள மாயா சக்தியின் வல்லமையாலேயாம். அதனால் தனக்கு இல்லாத கர்மத்தை இருப்பதுபோன்று அவன் காட்டுகிறான். அந்தக் கர்மமானது வெறும் குருட்டு வாய்ப்பாக அமைந்தது அன்று. ஜன சமூகத்தின் தொகைவினை முழுதும் அவதார புருஷனது ஜீவிதத்தில் விளங்குகிறது. அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் சிறந்த கருத்து ஒன்று அடங்கப் பெற்றிருக்கும். மானுடர் முன்னேற்றம் அடைவதற்கான மார்க்கத்தையும் அவதார புருஷன் விளையாட்டுப் போன்று வினையாற்றிக் காட்டுகிறான். ஆக, தனக்கென்ற வினையில்லை. மக்கள் உய்வதற்கான நெறி அவதார புருஷனது வாழ்வில் உண்டு. இயற்கையில் ஒவ்வொன்றும் தோன்றுதற்கேற்ற காலமுண்டு. அவதார புருஷன் ஒருவன் தோன்றுதற்கு ஏற்ற காலம் உளதா? விடை வருகிறது :

7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்

பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது, தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய், அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ, ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

பொருள் : பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

சமூக முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கர்மங்கள் தர்மங்களாகின்றன; தடையாயிருப்பவைகள் அதர்மங்களாகின்றன. அதர்மம் தலையெடுத்துப் பெருங் குழப்பங்களை உண்டுபண்ணும் நெருக்கடிகளிலெல்லாம் அவர் அவதரிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி அவதரித்து வந்து அவர் என்ன செய்கிறார்?

8. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும், துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும், தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும், யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

பொருள் : நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

களை யெடுத்தலும் நல்ல செடிகளுக்கு உரம் போடுதலும் சேர்ந்து அமைவது சிறந்த கிருஷியாகும். உலகில் கெட்டவர்களுடைய கூட்டம் பெருகிவிட்டால் அவர்களுக்கிடையில் தர்மம் தலையெடுக்காது. ஆகையால் யுத்தம், கொள்ளை நோய், பஞ்சம் இவைகள் வாயிலாக பகவான் அவர்களுக்குத் துன்பத்தை யூட்டுகிறார். துன்பம் ஒன்றே மக்களைச் சீர்திருத்துதற்கு உற்ற உபாயம். மரணத்தின் வாயிலாக அவர்களில் பெரும்பான்மையோரை ஒதுக்கித் தள்ளுதலும் அவசியமாகிறது.

மூன்று குணங்களில், ரஜோகுணமும், தமோகுணமும் அதிகரிக்கப் பெறுபவர்கள் அதர்மத்தில் ஈடுபடுகிறார்கள். ஆதலால் அவர்களுடைய தொகையைக் குறைத்தல் வேண்டும். சத்வ குணத்தில் இருப்பவர்களை ஓம்புதல் அடுத்தபடி நிகழ்கிறது. இங்ஙனம் மூன்று குணங்களுக்கிடையில் தாரதம்மியம் ஓரளவில் சமப்படுவதாகிறது. இதைத்தான் அவதார புருஷர் செய்து வைக்கிறார்.

மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்றுதானா நல்லார் அடையும் பயன்? காக்கப்படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :

9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந

அர்ஜுந!-அர்ஜுனா!  மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது, ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன், ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர், புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை, 
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

பொருள் : எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக்கொள்கிறான். அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான். இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும் அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.

ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது. ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான். மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப்பற்றி நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.

இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திரபூர்வமானவர்களல்ல என்றும், சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும் உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திரபூர்வமாகவும் ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம். ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.

திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள். அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள். அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்குந்தான் போகமுடியும். அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய்வரலாம். அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை. ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்த து ஏழு ரிஷிகள் மாத்திரமே அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர். எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே, சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.

ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம். ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது. வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக்கண்ணால்தான் இந்த உண்மையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.

என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:

10. வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:

வீத ராக பய க்ரோதா- விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், மந்மயா:-என் மயமாய், மாம் உபாஸ்ரிதா:-என்னை அடைக்கலம் புகுந்து, பஹவ: ஜ்ஞாநதபஸா பூதா-ஞானத்தவத்தால் தூய்மை பெற்று, மத்பாவம் ஆகதா: பஹவ:-என்னியல்பு எய்தினோர் பலர்.

பொருள் : விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.

சேற்று நீரிலுள்ள அழுக்கை நீக்கினால் அது நல்ல நீரோடு கலப்பதற்குத் தகுதியுடையதாகிறது. மனதிலுள்ள ஆசை, அச்சம், சினம் என்ற அழுக்குகளை நீக்கினால் அது ஈசுவரமயமாய் அமைகிறது. பிறகு ஈசுவரனுடைய மகிமையை அது அறிய வல்லதாகிறது. அவன் பெருமையை அறிந்தபின் அவனிடத்து அடைக்கலம் புகுதல் எளிதாகிறது. தீயோடு தொடர்வு வைக்கின்ற இரும்பு தானே தீ மயமாகிறது. சர்வேசுவரனிடத்து ஐக்கிய புத்தி வலுக்க வலுக்க ஜீவனுக்குப் பரபோதம் மேலிடுகிறது. ஆகையால் இந்த ஞானத்துக்கு நிகரான தபசு இல்லை. ஜீவபோதம் அறவே நீங்கிப் பரபோதம் நிலைத்து விடுவதால் இது மனிதனைப் பரிசுத்தவான் ஆக்குகிறது. இங்ஙனம் முக்தியடைவது இன்று ஏற்பட்டதன்று. தொன்றுதொட்டு இது உலகில் நிலைத்துள்ளது.

ஈசுவரன் ஏன் எல்லார்க்கும் முக்தி யளிப்பதில்லை? விடை வருகிறது:

11. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன், மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும், மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

பொருள் : யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

இயற்கையின் அமைப்பில் உணவு வகைகள் பல இருக்கின்றன. சுவையிலும், குணத்திலும், தரத்திலும் அவைகளுள் பேதமும் உள. ஓர் உயிர்க்கு உணவாவது மற்றோர் உயிர்க்கு நஞ்சு ஆவதும் உண்டு. ஆனால் அந்தந்த உயிர் தான் ஏற்கும் உணவைச் சேமித்து ஜீரணம் பண்ணுகிறது; அவ்வுணவினின்று புஷ்டியும் பெறுகிறது. உடலை வளர்த்து ஓம்புதல் உணவின் பயன் ஆகும். அதே விதத்தில் உலகில் மதங்கள் பல இருக்கின்றன. அவைகளுள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாதவைகளும் உண்டு. விக்கிரஹ ஆராதனை மஹாபாபம் என்கிறது ஒரு மதம். தானே ஒரு விக்கிரஹமாக வாய்த்துள்ள மனிதன் மற்றொரு விக்கிரஹத்தின் வாயிலாகவே பரமனை வழுத்தியாக வேண்டும் என்கிறது மற்றொரு மதம். இன்னும் வழிபாடு வேற்றுமை மதங்களுள் உண்டு. ஒரு மதம் ஆராதனை என ஆமோதிப்பதை மற்றொரு மதம் அடாத செயல் என ஒதுக்குகிறது. இப்படி மதங்கள் வேறுபட்டிருப்பினும் அவை யாவுக்கும் ஆதிநாயகனாக ஈசன் இலங்குகிறான். மக்களின் இயல்பு வேறுபாட்டுக்கு ஒப்பமத வேறுபாடும் இருக்கிறது. யார் யார் எந்த எந்த மதத்தின் மூலம் எப்படியெப்படி இறைவனை வணங்குகின்றார்களோ அப்படியெல்லாம் அவர் மக்களுக்கு ஊக்கம் கொடுத்து, பக்தியை வளர்த்து அவர்கள் தம்மை வந்தடைவதற்கு வழிகாட்டித் தருகிறார். மதங்கள் அனைத்துக்கும் அவருடைய அனுக்கிரஹம் உண்டு. மதங்கள் பலப்பலவாக அமைந்திருப்பது மானுட இயல்புகளுக்குத் தேவையாம். அவரவர் மதத்தை மக்கள் ஆழ்ந்து அனுஷ்டிப்பதற்கிடையில் மதங்களுள் சமரசம் காண்பது முற்றிலும் அவசியமாகிறது. சமரசம் காண்பது இறைவனுடைய பெருந்திட்டத்தைப் போற்றுவதாகும்.

முக்தியை நாடுபவர்களுக்கு பகவான் முக்தியைக் கொடுக்கிறான். புத்தியை (போகத்தை) நாடுபவர்களுக்கு பகவான் போகத்தைக் கொடுக்கிறான். போகப் பொருள்களாய்ப் பரிணமித்திருப்பதும் பகவானே யாதலால் போகத்தை நாடுபவர்களும் தம் அறிவுக்கு எட்டியபடி பகவானையே நாடுகிறார்கள். இயற்கையோடு வைத்துள்ள வெவ்வேறு விதமான இணக்கத்துக்கு ஏற்றாற்போன்று பலவிதமான அனுபவங்கள் வாயிலாக எல்லா உயிர்களும் இறைவனையே இறுதியாக வந்தடைவதால் மார்க்கங்கள் யாவும் அவனை நோக்கிச் செல்பவைகளாகின்றன. ஈசுவரன் கற்பக விருக்ஷம் போன்றவன். கற்பக விருக்ஷத்தின் அடியில் இருந்துகொண்டு யார் எதை விரும்புகிறார்களோ அதை அடைகின்றனர்.

ஈசுவரனையே அடைய விரும்பாது சிறிய பொருள்களைப் பெற மக்கள் ஆசைப்படுவது ஏன்?

12. காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா

இஹ மாநுஷே லோகே-இந்த மனிதவுலகத்தில், கர்மணாம் ஸித்திம் காக்ஷந், த:-தொழில்களில் வெற்றியை விரும்புவோர், தேவதா: யஜந்தே-தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள், ஹி கர்மஜா ஸித்தி:-தொழிலினின்றும் வெற்றி, க்ஷிப்ரம் பவதி-விரைவில் விளைவதன்றோ!

பொருள் : தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!

ஆத்ம ஞானத்தைவிட மிக எளிதில் அடையப்பெறுவது கர்மபலன். இம்மை என்றும் மனுஷ்யலோகம் என்றும் சொல்லப்படுவது இந்திரியங்களுக்குப் புலனாகும் இவ்வுலகம். அறிவிலிகள் எது விரைவில் அகப்படுகிறதோ அதில் பற்றுவைத்து அதையே நாடுகின்றனர். ஓர் அரசனோடு இணக்கம் வைப்பது அரிது எனினும் அவ்விணக்கம் எல்லா நன்மையையும் மேன்மையையும் பயக்கும். அரசனுடைய சிப்பந்திகளில் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் விரைவில் தொடர்வுகொள்ளலாம். ஆயினும் அவர்களிடமிருந்து அடையும் நன்மையும் மிக அற்பமானதேயாம். சர்வேசுவரனை ஆராதிப்பவர்கட்கு பக்தி, ஞானம், முக்தி முதலியன வரும். சிறு தெய்வங்களை வணங்குபவர்க்கு அதற்கேற்ற கர்மபலன் கிடைக்கிறது. மக்களுக்கிடையில் மனபரிபாகம் வேறுபடுகிறது. அதற்கு ஏற்ப அவர்கள் நாடுகின்ற நலனும் வெவ்வேறு வகைப்பட்டது.

அப்படியாயின் அவர்களது வகைகளை அறிவது எங்ஙனம்? விடை வருகிறது :

13. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது, தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும், அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

பொருள் : குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.

குணபேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வகுணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன். சத்வகுணமும் சிறிது ரஜோகுணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோகுணம் பெரும்பகுதியும் சிறிது தத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைசியன். தமோகுணம் பெரிதும் சிறிது ரஜோகுணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன். சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோகுணம் சிவப்பானது. தமோகுணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை. க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்திருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகளல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்லர். அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆயினும் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்திரிய இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணன் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது.

பின்பு, நான்கு வருணத்தார் நிறம் அந்தக்கரணம் அல்லது மனதை ஒட்டியதாகும். உலகத்தவர் பழக்க வழக்கத்தில் கொண்டுள்ள நான்கு வருணங்கள் பிறப்பை ஒட்டியனவாகும். சமூக அமைப்பில் ஒழுங்குப்பாடு இருக்கும் போது அவை தத்துவ அமைப்போடு ஒருவாறு ஒத்திருக்கும். இன்றைக்கு சமூகத்தில் உள்ள நிலைமையில் பிறப்பை அனுசரித்து வருணத்தை நிர்ணயிப்பது சிறிதும் பொருந்தாது. அத்யாத்ம வித்தைக்கு ஏற்ப நான்கு வருணங்கள் மனபரிபாகத்தை ஒட்டியனவாம். அதன்படி நான்கு சகோதரர்களுக்கிடையில் மனபரிபாகத்துக்கு ஏற்ப ஒருவன் பிராம்மணனாகவும், இன்னொருவன் க்ஷத்திரியனாகவும், மற்றொருவன் வைசியனாகவும், வேறு ஒருவன் சூத்திரனாகவும் இருக்கமுடியும். வருணத்தில் மேல்நோக்கிப் போகப் போக பரவித்தையில் ஈடுபடுதல் அதிகரிக்கிறது. வருணத்தில் கீழே போகப் போக கர்ம பலனில் பற்று அதிகரிக்கிறது. பழுத்த பழத்தில் தோல், சதை, விதை முதலியன பாகுபாடு அடைகின்றன. பிஞ்சில் எல்லாம் ஒரே பாங்கில் இருக்கின்றன. வருணத்தில் மேலோனுக்கு ஆத்ம தத்துவம், பிரகிருதி தத்துவம் முதலியன விளங்குகின்றன. பரிபாகம் அடையாத கீழ் வருணத்தவனுக்குப் பரவித்தை விளங்காது. (நான்கு வருணத்தின் கர்மங்கள் 18வது அத்தியாயம் 42,43,44வது சுலோகங்களில் விளக்கப்படுகின்றன.

இயற்கையில் முக்குணத்தாலாகிய எல்லாப்பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் நான்கு வருணங்கள் உண்டு. வாழ்க்கை முறையில் ஒரு வருணம் மற்றொரு வருணமாகப் பரிணமிப்பதும் சர்வ சாதாரணம்.

சமூகத்தார் தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் வருண தர்மம் பாரமார்த்திக உண்மைக்கு ஒத்ததாயிருக்குமானால் அச்சமூகம் முன்னேற்றமடைகிறது. பாரமார்த்திக உண்மையினின்று அது பிறழுகின்றவளவு சமூகமும் சீர்கேடு அடையும். அப்போதைக்கப்போது தோன்றும் அவதார புருஷர்கள் வருண தர்மத்தை ஒழுங்குப்படுத்தி வைக்கின்றனர். பகவான் உலகத்தைச் சிருஷ்டித்த போதிலும் அவர் கர்த்தா அல்ல என்பதன் உட்பொருள் 9வது அத்தியாயம் 5-10 வது சுலோகங்களில் விளக்கப்படுகிறது.

பகவான் பிரகிருதியிலுள்ள கர்மங்களுக்கெல்லாம் கர்த்தா அல்லவாதலால் :

14. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் யோऽபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே

மே கர்மபலே ந ஸ்ப்ருஹா-எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லைல, மாம் கர்மாணி ந லிம்பந்தி-என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை, ய: இதி மாம், அபிஜாநாதி-இங்ஙனம் என்னை யறிவோன், ஸ: கர்மபி: ந பத்யதே-கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

பொருள் : என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

அகங்காரம் உடையவர்களிடத்துக் கர்மம் மனோவிகாரத்தை உண்டுபண்ணுகிறது. பகவானிடத்தோ அகங்காரம் சிறிதேனும் இல்லை. ஆகையால் கர்மங்களால் தீண்டப் பெறாதவராக அவர் இருக்கிறார். அடையாத ஒன்றை அடைய விரும்புதல் ஆசையாகும். பகவானோ பரிபூரணர். அனைத்தையும் தம்மகத்து அடக்கிக்கொண்டு அவைகளுக்கு அப்பாலும் அவர் இருக்கிறார். ஆதலால் அவர் ஆசைப்படுவதற்கு ஒன்றுமில்லை. பகவானது சொரூபத்தை அறிபவர் தாமும் அகங்காரமற்று ஆசையற்றிருப்பார்கள். எக்கருமமும் அவர்களைக் கட்டுப்படுத்தமாட்டாது. அவர்கள் மேன்மையை அறிந்ததன் அறிகுறி தாமும் மேன்மையில் நிலைபெற்றிருத்தலாம்.

பரமாத்மா நிர்விகாரி என்று அறிந்தவர்கள் தத்தம் கர்மங்களையே ஒழித்துவிட்டார்கள். அதைப்பற்றி பகவான் பகர்வதாவது :

15. ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷúபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்

பூர்வை: முமுக்ஷúபி: அபி-முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும், ஏவம் ஜ்ஞாத்வா-இதையுணர்ந்து, கர்ம க்ருதம்-தொழிலே செய்தனர், தஸ்மாத் த்வம்-அதனால் நீயும், பூர்வை: பூர்வதரம் க்ருதம்-முன்னோர்கள் முன்பு செய்தபடி, கர்ம ஏவ குரு-தொழிலையே செய்யக் கடவாய்.

பொருள் : முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.

விவேகமுடைய தேகியானவன் அகங்காரத்தையும் ஆசையையும் விட்டுவிடுகிறானே யொழிய அவன் கர்மத்தையே விட்டு விடுவதில்லை. முக்தியை நாடியவர்கள் எல்லோரும் தொன்று தொட்டு இம்முறையைத்தான் கையாண்டார்கள். அர்ஜுனனுக்காகவென்று இது புதிதாக வந்த ஏற்பாடு அல்ல.

அப்படியானால் அர்ஜுனனுக்கு இதைப்பற்றி மனக் குழப்பம் ஏன் உண்டாயிற்று? அதில் ஆச்சரியம் இல்லை ஏனென்றால் :

16. கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்

கிம் கர்ம கிம அகர்ம இதி-எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில், கவய: அபி அத்ர மோஹிதா:-ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள், யத் ஜ்ஞாத்வா-எதை தெரிந்து கொள்வதால், அஸுபாத் மோக்ஷ்யஸே-தீங்கினின்றும் விடுபடுவாய், 
தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி-அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்.

பொருள் : எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.

அசுபங்களிலெல்லாம் மிகப் பெரியது பிறவிப் பிணி என்பது. தொலையாத இத்தொல்லையைத் தொலைப்பதற்கு வினையின் கூறு முழுதும் விளக்கப்பெறல் வேண்டும். உடலைக்கொண்டு ஓயாது வேலை வாங்குவதுதானே கர்மம் என்று அவசரப்பட்டு முடிவு கட்டிவிட வேண்டாம்.

17. கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:

கர்மண: அபி-தொழிலின் இயல்பும், போத்தவ்யம்-தெரிய வேண்டும், அகர்மண: ச போத்தவ்யம்-தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும், விகர்மண: ச போத்தவ்யம்-தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும், ஹி கர்மண: கதி: கஹநா-ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது.

பொருள் : தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.

இன்னதைச் செய் என்று சாஸ்திரம் விதித்துள்ளது கர்மம். இன்னதைச் செய்யாதே என்று சாஸ்திரம் விலக்கியிருப்பது விகர்மம். (விகர்மம் இங்கு இந்த அத்தியாயத்தில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அது 16வது 17வது அத்தியாயங்களில் ஆராயப்படுகிறது)

கர்மம் அகர்மம் ஆகிய இரண்டின் இயல்புகளாவன:

18. கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்

கர்மணி அகர்ம-செய்கையில் செயலின்மையும், ச அகர்மணி கர்ம-செயலின்மையில் செய்கையும், ய: பஸ்யேத்-எவன் காணுகிறானோ, ஸ மநுஷ்யேஷு புத்திமாந்-அவனே மனிதரில் அறிவுடையோன், ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்-அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்).

பொருள் : செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.

1. கர்மம் பிரகிருதியின் இயல்பாகும்; அகர்மம் ஆத்ம சொரூபம். அவிவேகிகள் இரண்டுக்குமிடையில் வித்தியாசம் தெரியாது குழப்பமடைகின்றனர். ரயில்வண்டி ஓடுகிறது. அதில் ஊர்ந்து செல்லும் பிரயாணி யொருவன் நிலத்தில் நிற்கும் மரங்கள் தன்னை எதிர்த்து ஓடுவதாகக் காண்கிறான். செயல் இல்லாத ஒன்றில் ஓடுதல் என்னும் செயல் காணப்படுகிறது. இங்கு அக்ஞானத்தால் அகர்மத்தில் கர்மம் காணப்படுகிறது. கடலில் தூரத்தில் ஓடும் கப்பல் கரையிலிருந்து பார்ப்பவனுக்கு அசையாது நிற்பது போன்று தென்படுகிறது. வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனும் அப்படியே காட்சி கொடுக்கிறது. ஈண்டு அக்ஞானத்தால் கர்மம் அகர்மமாக விளங்குகிறது. ஆக, இயற்கையில் எப்பொழுதுமே கர்மம் கர்மமாகவும், அகர்மம் அகர்மமாகவும் பொருள்படுகின்றன என்று சொல்லமுடியாது. மயக்கத்தால் ஒன்றின் இயல்பு மற்றொன்றின்மீது சுமத்தப்படுகிறது. அக்ஞானியானவன் தேகத்தைத் தான் என்று வைத்துக்கொள்கிறான். நான் இப்பொழுது வேலை செய்கிறேன். நான் இப்பொழுது இளைப்பாறுகிறேன் என்று பிரகிருதியின் செயலை ஆத்மாவின்மீது ஆரோபிக்கிறான். இத்தகையவன் ஒரு செயலும் புரியாது சும்மா உட்கார்ந்திருந்தாலும் அகங்காரமும் கர்த்ருத்வமும் அவனிடம் இருக்குமளவு அவன் கர்மம் செய்பவனே ஆகிறான். இந்த அக்ஞான நிலை அகர்மத்தில் கர்மம் என்பதாகும். ஆத்ம சொரூபத்தை அறிந்த ஞானிக்கு அகங்காரமில்லை. அவனது உடல் ஓயாது வேலை செய்தாலும் ஆத்மா சாக்ஷியாயிருக்கிறது. ஒரு கர்மத்தோடும் அது சம்பந்தப்பட்டதல்ல. ரயில் வண்டியில் தூங்கிக்கொண்டு போனவன் நடந்தவனுமல்லன், தூக்கங்கெட்டவனுமல்லன். உடல் செய்யும் கர்மமெல்லாம் ஆத்மாவைச் சேர்வதில்லை. கர்மத்தில் அகர்மம் என்ற பெரு நிலையாகும் இது. ஞானியர்க்கும் நல்ல விவேகமுடையவர்க்குமே இது சாத்யம்.

2. கர்மம்=சரீரம் முதலானவைகளைக் கொண்டு. நடை பெறும் தொழில் யாவும். அகர்மம்=ஞானம்.

ஒரு மனிதன் முறையாக உணவைச் சமைத்துக்கொண்டே வருகிறான். சமைத்தல் என்னும் கர்மம் அவனிடம் நடைபெறுகிறது. அது நாளடைவில் நன்றாய்ச் சமைத்தல் என்ற ஞானத்தில் கொண்டு சேர்க்கிறது. ஆக கர்மத்தில் அகர்மத்தைக் காணுதல் என்பது செவ்வையாகக் கர்மம் செய்பவர்க்கு ஞானம் உண்டாகிறது என்பது அனுபவபூர்வமாகக் காணப்படுகிறது. சமைத்தலைப்பற்றிய ஞானம் வந்த பிறகு அச்சமையல் தொழில் இன்னும் திறமையுடன் செய்யப்படுகிறது. இஃது அகர்மத்தில் கர்மத்தைக் காணுதல் எனப்பொருள்படுகிறது. இங்ஙனம் கர்மம் ஞானவளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; ஞானவளர்ச்சி திறமையுடன் தொழில்புரிதலைத் தோற்றுவிக்கிறது. நல்வாழ்க்கை என்னும் கர்மம் ஆத்ம ஞானத்தை உண்டுபண்ணுகிறது. ஆத்ம ஞானம் அடைந்தவர் வாழ்க்கையை மிக மேலானதாகச் செப்பனிட்டு வாழ்கின்றனர்.

3. கர்மம்=ஜீவர்களால் செய்யப்படும் தொழில். அகர்மம்=(அ=விஷ்ணு) விஷ்ணுவின் கர்மம்.

ஜீவன் செய்கிற கர்மங்களுக்குத் தானே கர்த்தாவென்று அவன் எண்ணுகிறான். உண்மையில் அந்தக் கர்மங்கள் யாவும் விஷ்ணுவினுடையவைகளேயாம். தான் கர்த்தா என்ற எண்ணத்தையும் அகங்காரத்தையும் அகற்றி, தன் மூலம் நடைபெறுகிற கர்மங்களெல்லாம் பகவானுடையவைகள் என்ற எண்ணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தில் அகர்மத்தைக் காண்பவனாகிறான். சொப்பனத்தில் ஒரு ஜீவன் செய்யும் கர்மத்துக்கு அவன் கர்த்தாவல்லன். அங்கு நடைபெறுகிற கர்மங்களும் உண்மையில் விஷ்ணுவினுடையவைகளாம். சொப்பனத்தில் தான் கர்த்தா அல்லாத நிலையில் ஜீவன் அகர்மத்தில் இருக்கிறான். அப்பொழுதும் விஷ்ணுவினுடைய கர்மம் நடைபெறுகிறதென்று உணர்பவன் அகர்மத்தில் கர்மத்தைக் காண்கிறான். மனிதன் தன்னுடைய கர்மம் என்று எண்ணிச் செய்வதும், அகங்காரமில்லாது செய்வதும் ஆகிய எல்லாக் கர்மங்களும் உண்மையில் விஷ்ணுவினுடைய கர்மங்களாகின்றன. இதை அறிந்துகொள்பவனே புத்திமான்.

4. ஜீவனைப் பந்தப்படுத்துவது கர்மத்தின் இயல்பு. அகங்கார மமகாரமற்றுக் கர்மத்தை ஈசுவரார்ப்பணமாகச் செய்தால் அத்தகைய கர்மம் மனிதனைப் பந்தப்படுத்துவதில்லை. நிஷ்காமியமாகச் செய்யும் கர்மம் பழைய பந்தங்களையும் நீக்குகிறது. ஆக, கர்மத்தில் அகர்மத்தைக் காணுதல் என்பது பந்தத்தை உண்டு பண்ணுகிற கர்மத்தைக் கட்டவிழ்க்கும் கர்மமாக மாற்றுதல் என்று பொருள்படுகிறது. சோம்பலால் அல்லது அறிவின்மையினால் ஒருவன் நல்வினையொன்றும் செய்யாதிருப்பானாகில் அதனால் அவனுக்குக் கேடு விளைகிறது. கர்ம பந்தமும் அவனுக்கு அதிகரிக்கிறது. நல்வினையைச் செய்யாதொழித்தல் அகர்மமாகிறது. அதனால் விளையும் கேடு கர்மமெனப்படுகிறது. இங்ஙனம் அகர்மத்தில் கர்மத்தைக் காணுதல் விவேகியினுடைய செயலாகிறது.

5. சந்தடி நிறைந்துள்ள சமூக வாழ்க்கை, நிசப்தமான ஏகாந்த வாழ்க்கை ஆகிய இரண்டிலும் மனது பண்பட்டிருக்க வேண்டும்.

கர்மத்தில் அகர்மம்=யுத்தம் புரிதலும் அதற்கு ஒப்பானதுமாகிய பல்வேறு அலுவல்களுக்கிடையே மனது ஒரே சாந்த சொரூபமாயிருத்தலாம். அகர்மத்தில் கர்மம்=வெளிப்பார்வைக்கு வினையாற்றுதல் என்பது ஒன்றுமில்லாமல் ஏகாந்தமாக ஒரு குகையில் அமர்ந்திருக்கையில் மனது தைலதாரை போன்று இடையறாது ஈசுவரனே நாடிச் செல்லுதல் என்ற சிறந்த கர்மத்தைச் செய்தலாம்.

ஒரு சார்பாகப் பண்பட்ட மனது அரைகுறையானது. சிலர் ஏகாந்த வாசத்தில் நன்கு பயிற்சியடைந்திருக்கின்றனர். அத்தகையவர் சமூகக் குழப்பத்துக்கிடையில் வந்தால் தடுமாற்றமடைகின்றனர். இன்னும் சிலர் சர்வகாலமும் ஜனக்கூட்டத்துக்கிடையில் வாழ்ந்து வருகின்றனர். சிறிது நேரமாவது தனியாயிருக்க இவர்களுக்கு இயலுவதில்லை. இவர்களை ஏகாந்த வாசத்தில் வைத்தால் விரைவில் பைத்தியம் பிடித்துவிடும். தனியாக வசித்திருக்கமட்டும் தெரிந்துகொண்டவர், சமூகத்தைச் சார்ந்திருத்தலை மாத்திரம் தெரிந்துகொண்டவர் ஆகிய இவ்விருதிறத்தாரும் அரைகுறையான பயிற்சி பெற்றவர்களே. ஏகாந்தத்தில் ஈசுவர சிந்தனை என்ற சிறந்த செயல் நடைபெறுகிறது. சமூகச் சந்தடிக் கிடையில் சாந்தமே சித்தமிசை குடிகொள்கிறது. இப்படி இருவித இயல்பிலும் பயிற்சி பெற்றவரே நிறைமனிதர் ஆகின்றனர்.

6. ஸ்ரீ கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமர்க்களத்துக்கு வருகிறார்கள். பகவான் தேர் ஓட்டுகிறார். பார்த்தன் போருக்கு ஆயத்தமாக வருகிறான். யாரை எதிர்த்து எத்தகைய கடும் போர் புரிந்தாகவேண்டும் என்ற எதார்த்தம் இப்பொழுதுதான் அர்ஜுனனுக்குத் திடீரென்று விளங்குகிறது. எட்ட எறிகிறான் அம்பையும் வில்லையும். வேண்டாம் இவ்வெம்போர் என்று விளம்புகிறான். செயலற்றுச் சும்மா உட்கார்ந்துவிடுகிறான்.

ஒன்றோடொன்று ஒவ்வாத இரண்டுவிதக் காட்சிகளை இப்பொழுது பகவானும் பார்த்தனும் தருகிறார்கள். கர்மத்தில் அகர்மத்துக்கு விளக்கமாக வந்தமைகிறது பகவானது பெற்றி. தேர் கடவும் கடமை அவருடையது. அதில் பூட்டியுள்ள வேகம் வாய்ந்த வெண்குதிரைகள் நான்கையும் இடது கையில் அவர் கெட்டியாகக் கயிற்றால் பிடித்துக்கொண்டிருக்கிறார். கீதோபதேசம் செய்தவன் புறச்சின்னமாக வலது கையில் அவர் சின்முத்திரை தாங்கியிருக்கிறார். கைகள் இரண்டும் இப்படிச் செயலில் ஈடுபட்டிருக்கையில் முகவிலாசம் மற்றொரு காட்சி தருகிறது. அங்குச் சாந்தி தவழ்கிறது. மனம் மலைபோன்று அசையாதிருக்கிறது என்று அது விளக்குகிறது. கர்மம் பிரகிருதியோடு சேர்ந்தது. புருஷன் கர்மம் செய்வதில்லை என்ற பேருண்மையை ஸ்ரீ கிருஷ்ணன் என்ற பெயர்பூண்டுள்ள மூர்த்தியானவர் விளக்குகிறார். விரைந்து வினையாற்றுதற்கிடையில் விச்ராந்தி-கர்மத்தில் அகர்மம் என்ற கோட்பாட்டுக்கு அவரே சான்றாகின்றார்.

இனி, அர்ஜுனன் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டுச் செயலற்றிருப்பவனாகத் தென்படுகிறான். பெயரளவில் வினையைத் துறந்துவிட்டான். அவனுக்கு மனதுக்குள் ஒரே குழப்பம். அச்சம் ஒருபுறம் அவனை அல்லற்படுத்துகிறது. மற்றொருபுறம் துன்பம் தேகத்தைத் துளைக்கிறது. அகத்தின் நிலைகுலைவு அவன் முகத்தில் மிளிர்கிறது. கர்மத்தைத் துறந்தவனாகத் தென்படுபவன் கர்மத்தில் காய்கிறான். அவனது நிலை அகர்மத்தில் கர்மமாகும்.

உலக வாழ்க்கையை யோகி ஒருவன் எங்ஙனம் நடாத்த வேண்டும் என்று யோகேசுவரனாகிற கிருஷ்ணன் தாமே நடாத்திக் காட்டுகிறார். முறை தெரியாது மனிதன் ஏமாற்றம் அடைந்து விடலாகாது என்பதற்கு அர்ஜுனனுடைய கீழ்நிலையே எடுத்துக்காட்டாகும். எல்லாப் பாஷ்யங்களினுடைய உட்கருத்தும் இவ்விருவர் தரும் காட்சியில் அடங்கப்பெற்றிருக்கின்றன. இவைகளைத் துருவி ஆராய்பவன் புத்திமானாகிறான்; அவன் சிறந்த யோகியாவான். முக்தி ஈறாக இகபர மிரண்டையும் பெறவல்லவனும் அவனே.

ஸ்ரீராமகிருஷ்ணர் வெளித்தோற்றத்தில் அகர்மத்தில் இருந்தார். உள்ளே கடவுள் நாட்டம் என்ற பெரிய கர்மம் நடை பெற்றது. விவேகானந்தர் லோகஹிதம் என்ற பெரிய கர்மத்துக்கிடையில் உள்ளே ஆத்ம சொரூபம் என்ற அகர்மத்தில் நிலைத்திருந்தார். தூணைப் பிடித்துக்கொண்டிருக்கும் பாலன், கீழே விழுந்து விடுவோம் என்ற பயம் கொஞ்சமுமில்லாமல், கன வேகத்துடன் அதைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அதுபோலவே, ஈசுவரனிடம் மனத்தைத் திடமாக நிறுத்திவிட்டு, நீ உனது காரியங்களைச் செய். அப்போது உனக்கு அபாயங்களே நேரமாட்டா.

19. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:-எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம், காம ஸங்கல்ப வர்ஜிதா:-விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம்-எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ, தம் புதா:-அவனை ஞானிகள், பண்டிதம் ஆஹு:-அறிவுடையோன் என்கிறார்கள்.

பொருள் : எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.

கயிறு ஒன்று கட்டுதற்கு உதவுகிறது. அக்கயிறு வெந்து பஸ்மமான பிறகு பழைய வடிவத்தை உடைத்திருக்கிறது. எனினும் அது கட்டுதற்கு உதவாது. கர்மமானது ஆசையினால் தூண்டப் பெற்றதாயிருக்கும்பொழுதும், அது சங்கற்பத்தில் தோய்ந்திருக்கும்பொழுதும் மனிதனைப் பிணிக்கவல்லதாகிறது. சர்வேசுவரனது அருளால் வந்த கர்மங்கள் சர்வேசுவரன் என்ற அக்கினியில் ஆகுதியாக அர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற எண்ணத்துடன், கர்மம் செய்கிறவனுக்கு அகங்காரம் இல்லை. தான் கர்த்தா என்ற எண்ணமும் இல்லை; ஆகையால் அவன் ஓயாது வினையாற்றினாலும் வினை என்னும் தளையில் பிணிக்கப்பட்டவன் அல்லன். அவனைப் பேரறிஞன் என்று ஞானிகள் பகர்கின்றனர். கர்மத்துக்கிடையில் அகர்மம் அவன்பால் எங்ஙனம் நிலைபெறுகிறது எனின் :

20. த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:
கர்மண்யபிப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:

கர்ம பலா ஸங்கம் த்யக்த்வா-கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக, நித்யத்ருப்த: நிராஸ்ரய:-திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக, ஸ: கர்மணி அபிப்ரவ்ருத்த: அபி-அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட, கிஞ்சித் ஏவ ந கரோதி-சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்).

பொருள் : கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.

அகர்மம் எது என்பதைப் புறத்தே தென்படும் செயலற்ற காட்சி விளக்காது. அகத்தில் உள்ள மனநிலை ஒன்றே அகர்மத்துக்கு விளக்கமாகும். தபால்காரன் ஒருவன் பணம்கொண்டு வந்து செலுத்தி ஒருவரை மகிழ்வூட்டுகிறான்; நற்செய்தி அடங்கப்பெற்ற கடிதம் கொடுத்து இன்பம் விளைவிக்கிறான். மற்றொருவர்க்கு இழவு செய்தி கொண்ட கடிதம் கொடுத்துத் துன்பம் விளைவிக்கிறான். இப்படி இன்ப துன்பங்களை வழங்கும் வினைகளில் அவன் பற்றுடையவன் அல்லன். இங்ஙனம் யோகி ஒருவன் தன் அலுவல்களெல்லாம் சர்வேசுவரனது ஆராதனையென்று கருதி ஆசையைத் துறந்து அவைகளை நன்கு செய்து முடிக்கிறான். பற்று இன்மையினால் அவன் நித்திய திருப்பதனாகிறான். கர்ம பலனில் ஆசையில்லாது தன் கடமையைச் செய்பவர்க்கு அரசன் முதல் ஆண்டிவரையில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய மன நிலையுடையவன் கர்மத்துக்கிடையில் அகர்மத்தில் நிலைத்திருப்பவன் ஆகிறான்.

ஆத்ம ஞானத்துக்கு ஞான சாதனைகள் மிகவும் அவசியம். ஆனால் விசுவாசம் பூரணமாக இருந்தால், கொஞ்சம் அப்பியாசமே போதுமானதாக இருக்கும்.

ஒரு சமயத்தில் வியாஸர் யமுனை நதியைக் கடந்துபோக இருந்தார். அதே தருணத்தில் கோபிகாஸ்திரீகளும் அங்கு வந்தனர். ஆனால் ஓடக்காரன் ஒருவனுமில்லை. ஆதலால் அவர்கள் வியாஸரை நோக்கி, சுவாமி! இப்போது என்ன செய்கிறது! என்று கேட்டனர். அதற்கு வியாஸர், விசாரப்படவேண்டாம். நான் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றேன். ஆனால், எனக்குப் பசியாக இருக்கிறது. உங்களிடம் ஏதாவது தின்பண்டம் இருக்கிறதா? என்றார். கோபிகாஸ்திரீகள் தாங்கள் வைத்திருந்த பால், ஏடு, வெண்ணெய் எல்லாவற்றையும் கொடுக்க, வியாஸர் அவைகளை வாங்கிப் புசித்தார். பிறகு கோபிகள், ஆற்றைக் கடப்பது எப்படி? என்று கேட்க, வியாஸர் ஆற்றங்கரையில் நின்றுகொண்டு, யமுனாதேவீ! நான் இன்று உபவாஸமிருப்பது மெய்யானால் நீ எங்களுக்கு வழிவிடவேண்டும்; நாங்கள் ஆற்றைக் கடந்து அக்கரை போய்ச் சேருகிறோம் என்று பிரார்த்தித்தார். அப்படிப் பிரார்த்தித்தவுடன் யமுனை நதியின் ஜலத்தில் ஒரு பிளவு உண்டாயிற்று; தரை தெரிந்தது. கோபிகளுக்கு அதியாச்சரியமுண்டாயிற்று. அவர்கள் கொடுத்த பால் முதலியவற்றை வியாஸர் வாங்கிப் புசித்திருக்க அவர் இன்று உபவாஸமிருப்பது மெய்யானால் என எப்படிச் சொல்லக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். அந்தப் பண்டங்களைப் புசித்தது அந்தர்யாமியான ஈசுவரனே தவிர வியாஸரல்லர். இந்த விஷயத்தில் வியாஸருக்கு இருந்த விசுவாசத்தின் பலத்தினால் அவர் அப்படிச் சபதம் பண்ணினார் என்பதைக் கோபிகா ஸ்திரீகள் தெரிந்து கொள்ளவில்லை.

யோகியின் மனநிலை மேலும் விளக்கப்படுகிறது :

21. நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:
ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்

யதசித்தாத்மா-சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, த்யக்த ஸர்வ பரிக்ரஹ:-எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, நிராஸீ-ஆசையற்றவனாய், கேவலம் ஸாரீரம் கர்ம குர்வந்-வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும், கில்பிஷம் ந ஆப்நோதி-பாவத்தையடைய மாட்டான்.

பொருள் : ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.

ஆத்ம வளர்ச்சிக்குத் தடையாக பந்தத்தை உண்டுபண்ணும் கர்மம் பாபமெனப்படுகிறது. எந்த யோகிக்குப் பாபமில்லை? ஆசையை அறவே அகற்றியவனுக்குப் பாபமில்லை. ஆசை என்னும் வேகம் கெடுமிடத்து அந்தக்கரணம், பாகியகரணம், உடல்  ஆகிய யாவும் ஒழுங்காக வினையாற்றுகின்றன. காற்றை எம் மனிதனும் தனக்காகவென்று அலாதியாக எடுத்து வைத்துக் கொள்வதில்லை. அங்ஙனம் யோகி எப்பொருளையும் அலாதியாகத் தனக்காகவென்று தேடியோ அல்லது தானமாக வாங்கியோ வைத்துக்கொள்வதில்லை. ஒரு பொருளுக்கும் உரிமை பாராட்டாதிருப்பது அபரிக்கிரஹம் எனப்படும். உடலுக்கு வலிவு இருக்குமளவு அதைக்கொண்டு உழைக்கலாம். வேண்டியவளவு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். உழைப்புக்கென்றே ஏற்பட்ட உடல் வீணாய்க்கிடந்து கெட்டுப்போகவிடலாகாது. தேகம் தொழில் புரிகையில் மனத்துக்கண் நான் கர்த்தா என்ற விகாரம் ஏதேனும் ஏற்படலாகாது. ஸ்ரீ கிருஷ்ணபகவானும் மற்ற அவதார புருஷர்களும் உடல் தாங்கியிருந்த பாங்கே இதற்குச் சான்றாகும்.

பொருள்களினிடத்து உரிமை பாராட்டாதவனுக்கு உடல் வாழ்க்கை எங்ஙனம் நடைபெறும் என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :

22. யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே

யத்ருச்சா லாப ஸந்துஷ்ட-தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக, விமத்ஸர:-பொறாமையற்றவனாக, த்வந்த்வ அதீத:-இருமைகளைக் கடந்தவனாக, ஸித்தௌ அஸித்தௌ ச ஸம:-வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான், க்ருத்வாபி ந நிபத்யதே-தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

பொருள் : தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

தான் முயற்சி யெடுத்துக்கொண்டாலொழியத் தனக்குப் பொருள் வந்து கைகூடாது என்று எண்ணுபவன் தன் கர்மத்துக்குக் கர்த்தாவாகிறான். இவ்வெண்ணம் அக்ஞானத்தினின்று உதிப்பதாகும். தனது உடலின் தேவைகளைப்பற்றி எண்ணாதிருக்குமளவு ஒருவன் ஆத்மசாதனத்துக்குத் தகுதியுடையவனாகிறான். அவன் தேவைகளைக் கவனித்துக் கொள்வது ஈசுவரனுடைய பொறுப்பாகிறது. ஈசுவரப் பிரீதியாக எது வந்து அமைகிறதோ அதைக்கொண்டு சாதகன் திருப்தியடைகிறான். குளிர் வெப்பம், வெற்றி தோல்வி இவைபோன்ற இருமைகளில் எது வந்து வாய்த்தாலும் அது ஈசுவரப் பிரசாதம் என்றே சாதகன் நினைக்கிறான். அந்நினைவால் அவன் இருமைகளை வென்றவனாகிறான். மற்றவர்களுக்குக் கிடைக்கும் லாபம் லௌகிகன் ஒருவன் உள்ளத்தில் பொறாமைக்கு இடம் கொடுக்கிறது. சாதகன் ஒருவனோ அது முற்றும் இறைவனது ஆணையென்று கருதி மகிழ்வடைகிறான். ஈசுவர கிருபையால் எல்லாம் நடை பெறுகிறது என்று அவன் முயற்சியற்றிருப்பதில்லை. தான் செய்ய வேண்டிய முயற்சிகளையெல்லாம் செய்துகொண்டேயிருக்கிறான். அம்முயற்சியால் வரும் வெற்றியும் தோல்வியும் தனதல்லவென்று அவன் நடுவு நிற்கிறான். இத்தகைய பான்மையுடையவனுக்குக் கர்மபந்தம் ஒன்றும் கிடையாது.

23. கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே

கதஸங்கஸ்ய-உலகப் பற்றை ஒழித்து, முக்தஸ்ய-உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:-ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன், யஜ்ஞாய ஆசரத:-வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான், ஸமக்ரம் கர்ம ப்ரவிலீயதே-கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.

பொருள் : பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.

பந்தமும் முக்தியும் மனதைப் பொறுத்தனவாம். பகவத் பிரீதியின் பொருட்டுக் கர்மம் செய்கிறவன் யாகம் செய்கிறவனாகிறான். மனப்பற்று நீங்கியபின் எவ்வளவு கர்மம் செய்தாலும் கேடு ஒன்றும் உண்டாவதில்லை. கடலுக்குள்ளே கொட்டிய உப்புப்போன்று கர்மம் பந்தத்தை உண்டுபண்ணாது கரைந்து போகிறது.

முதலில் உள்ளங்கைகளில் எண்ணெயைத் தடவிக்கொண்டு பலாப்பழத்தை அறுத்துச் சுளைகளை எடுப்பாயானால் பிசின் உன் கைகளில் ஒட்டிக்கொண்டு தொந்தரை செய்யாது. அதுபோல, முதலில் பரமாத்மாவைப்பற்றிய ஞானத்தால் உனக்குப் பாதுகாப்பை உண்டாக்கிக்கொள். பிறகு செல்வம் முதலான உலகப் பொருள்களினிடையே நீ வசித்தால், அவைகளில் நீ எவ்வழியிலும் வசப்படமாட்டாய்.

24. ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: 
ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் 
ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா

அர்பணம் ப்ரஹ்ம-வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான், ஹவி: ப்ரஹ்ம-ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான், ப்ரஹ்மாக்நௌ ஹுதம்-பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான், ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா தேந-பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால், கந்தவ்யம் ப்ரஹ்ம ஏவ-அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்.

பொருள் : பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.

தன்னைக் கர்த்தாவாக அஹங்கரித்து யாகம் செய்பவனுக்குப் பேத புத்தியிருக்கிறது. யாகம் செய்கிற தன்னை எஜமானனென்றும், யாகத்துக்குரிய தீ யென்றும், திரவியம் என்றும், அதை ஏற்றுக்கொள்ளும் தேவதையென்றும் அவன் வேற்றுமை பாராட்டுகிறான். ஆனால் ஞானயக்ஞத்தில் நிலைபெற்றிருப்பவனுக்குத் தான், தீ, திரவியம், தேவதை, யாகம் ஆகிய அனைத்தும் பிரம்ம சொரூபமேயாம்.

ஆகாரத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஞானிக்கு இன்றியமையாத நித்திய கர்மமாகிறது. அந்த நித்திய கர்மத்தையே அவன் ஞான யக்ஞமாகக் கருதுகிறான். உண்ணும் உணவு பிரம்மம்; உண்ணுதல் என்ற செயலும் பிரம்மம்; உண்கிறவனும் பிரம்மம்; அதைச் செமிக்கும் உதரக்கனலும் பிரம்மம். இங்ஙனம் பிரம்ம நிஷ்டையில் நிலை நின்று ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்.

உண்ணலும் உனதே; உயிர்த்தலும் உனதே; உடலுயிர் மனமெல்லாம் உனதே. எண்ணலும் உனதே; இச்சையும் உனதே; என் செயற் பயனெலாம் உனதே.

25. தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி

அபரே யோகிந:-சில யோகிகள், தைவம் யஜ்ஞம் ஏவ-தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே, பர்யுபாஸதே-வழிபடுகிறார்கள், அபரே ப்ரஹ்மாக்நௌ-வேறு சிலர் பிரம்மத் தீயில், யஜ்ஞேந ஏவ யஜ்ஞம்-வேள்வியையே ஆகுதி செய்து, உபஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

பொருள் : சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.

தேவதைகளை ஈசுவரனுடைய அம்சங்களாகக் கருதி அவர்களுக்கு யாகம் செய்வது சிலருக்குச் சாதனமாகிறது. ஆத்மாவுக்கு அமைந்துள்ள பெயர்களில் யக்ஞம் என்பதும் ஒன்று. ஆக யக்ஞத்தினால் யக்ஞத்துக்கு ஆகுதிகொடுப்பது என்பது ஆத்மாவினால் ஆத்மாவுக்கு ஹோமம் செய்தல் என்று பொருள்படுகிறது. நதி கடலில் கலந்து தன் தனி வியக்தியை இழக்கிறது. அங்ஙனம் உபாதியோடு கூடிய ஜீவாத்மாவானது அகண்ட சச்சிதானந்தமாகிய பரமாத்மாவின்கண் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. அப்பொழுது ஜீவபோதம் அகன்றுபோய் பரபோதம் எஞ்சி நிற்கிறது. இதுவே ஞானிகள் செய்யும் ஞான யக்ஞமாகிறது.

26. ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி

அந்யே ஸ்ரோத்ராதீநீ இந்த்ரியாணி-வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை, ஸம்யமாக்நிஷு, ஜுஹ்வதி-அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள், அந்யே ஸப்தாதீந் விஷயாந்- வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை, இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி-இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்.

பொருள் : வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.

சம்யமம் செய்தல் என்பது அடக்குதல் என்று பொருள்படுகிறது. இந்திரியங்கள் விஷயாதிகளில் செல்லாது அடக்குதல் ஒருவித யாகம். இந்திரியங்கள் விஷயங்களில் பொருந்தும் படி செய்தல் மற்றொருவித யாகம். இதில் முரண்பாடு ஏதுமில்லை.

இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களிலே பற்றுதலோடு செல்லுதல் அவைகளின் இயல்பு. பொறிவாயில் ஐந்தும் அவிந்து வேலைக்கு உதவாதவைகள்போல் அடங்கியிருக்குங்கால் அவைகள் முறையாக சம்யமம் செய்யப்பட்டவைகளாகின்றன. இதனால் மனது ஞானத் தெளிவடைகிறது. ஆக, இது ஒருவித யாகமாகிறது.

ஒவ்வொரு இந்திரியமும் ஈசுவர சம்பந்தமான விஷயத்தையே பொருள்படுத்துமாயின் அந்த இந்திரியத்தால் கேடு ஒன்றும் உண்டாவதில்லை. கண்கொண்டு பார்ப்பதெல்லாம் கடவுள் சம்பந்தமானவைகள்; காதால் கேட்பதெல்லாம் கடவுளைப்பற்றிய சொற்களேயாம். இங்ஙனம் ஐந்து இந்திரியங்களையும் தெய்விக விஷயங்களிலேயே பிரவிருத்திக்கும்படி செய்வதால் மனது தெளிவடைகிறது. அது ஞானத்துக்குத் தகுதியுடையதாகிறது.

அடங்காத இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களைப் போகத்துக்குரியவைகளாகப் பொருள்படுத்துகின்றன. கட்டுக்கு அடங்கிய இந்திரியங்களோ இந்திரியார்த்தங்களில் செல்லுவதில்லை. அல்லது அவைகள்பாற் சென்றால் அவைகளையெல்லாம் போகவஸ்துக்களென்று பொருள்படுத்தாது ஈசுவர மயமாகப் பொருள்படுத்துவனவாகின்றன. ஆக, இரண்டு விதத்திலும் ஞான யக்ஞம் கைகூடுகிறது.

27. ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே

அபரே ஸர்வாணீ இந்த்ரியகர்மாணி-வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும், ப்ராணகர்மாணி ச-உயிர்ச்செயல்களையும், ஜ்ஞாநதீபிதே-ஞானத்தால் ஒளிபெற்ற, ஆத்ம ஸம்யம யோகாக்நௌ-தன்னாட்சியென்ற யோகத் தீயில், ஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

பொருள் : வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச்செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.

எண்ணெய் வார்க்குமிடத்துத் தீபம் பிரகாசிக்கிறது. அங்ஙனம் விவேகம் உதயமாகுமிடத்து ஞான தீபம் பிரகாசிக்கிறது. மனது வெளி விஷயங்களுக்கு உரியதல்ல; ஆத்மாவுக்கே உரியது என்ற எண்ணம் வலுக்குமிடத்து அதுவே விவேகமாகும். அக்னியில் நெய்யை ஆகுதியாகப் போடுங்கால் அந்த நெய்யே அக்னியாக மாறுகிறது. மனதை ஆத்மஞானம் என்ற அக்னியில் சமர்ப்பித்தால் அப்படி மனதுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் யோகம் சுடர்விட்டெரியும் தீ போன்றதாகும். மனது ஆத்ம சொரூபத்தில் ஒடுங்கவே இந்திரிய கர்மங்களும் பிராண கர்மங்களும் கொடிய செயலற்று ஆத்மசொரூபமாய் மாறுகின்றன. தமது கீழான இயல்பை மேலான இயல்பாக மாற்றுவது இவர்கள் செய்யும் யாகமாகும். பிராண கர்மம் என்பது உடல் முழுதும் வியாபித்துள்ள உயிர்ச் சக்தியாம்.

28. த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா:

அபரே த்ரவ்யயஜ்ஞா-வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர், தபோயஜ்ஞா-தவத்தால் வேட்போர், ததா யோகயஜ்ஞா ச-அதே போல யோகத்தால் வேட்போர்
ஸம்ஸிதவ்ரதா: யதய:-அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர், 
ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞா-சிலர் ஞானத்தால் வேட்போர்.

பொருள் : விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.

நல்வழியில் பொருளை ஈட்டுதல், அதைப் பொது நன்மைக்கென்று பயன்படுத்துதல் ஆகிய செயல்கள் திரவிய யக்ஞமாகும். இரும்பை உருக்கிப் புதுப்பிப்பதுபோன்று மனதை தெய்வப்பெற்றியில் இளக்கித் தெய்வத்தன்மை வாய்ந்ததாகச் செய்வது தபசு. இப்படித் தவம் புரிதலையே யாகமாகச் செய்பவர் சிலர். அஷ்டாங்க யோகத்தை அனுஷ்டிப்பது இன்னும் சிலர்க்கு யாகமாகிறது. தன்னடக்கம் பயிலுகிறவளவு ஒரு சாதகனுக்குச் சாஸ்திர ஆராய்ச்சி பயன்படும். அத்துடன் நல்வாழ்க்கையைப் பற்றிய உறுதியான விரதத்தைக் கையாளுதல் வேண்டும். ஆன்றோர் இயற்றிய நூல்களைக் கற்பதையும், அவைகளினின்று தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்குதலையும் யாகமாகச் செய்பவனுக்குச் சாஸ்திர ஞானமும் அனுபவ ஞானமும் வளர்கின்றன. மற்றவர்களுக்கு ஒருவன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதுவே அவனிடத்து இன்னும் அதிகமாக வளர்கிறது. இதுதான் யாகத்தைப் பற்றிய உண்மை.

29. அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:

அபரே ப்ராணாயாமபராயணா:-வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், ப்ராணஅபாநகதீ, ருத்த்வா-பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
அபாநே ப்ராணம், ப்ராணே அபாநம்-அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும், ஜுஹ்வதி-ஆகுதி பண்ணுகிறார்கள்.

பொருள் : இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.

மனதுக்கும் வாயுவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. மனம் ஒடுங்குமிடத்து வாயு ஒடுங்கும்; வாயு ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்கும். மனதில் உண்டாகும் பயம், காமம், குரோதம் ஆகிய கெட்ட விகாரங்களுக்கு ஏற்றபடி சுவாசப் போக்குவரவு தடுமாற்றமடைகிறது. அமைதி, அன்பு, மகிழ்வு ஆகிய நல்ல விருத்திகள் சித்தத்தில் உண்டானால் அவ்வேளைகளில் சுவாசத்தின் போக்குவரவு ஒழுங்காக நடைபெறுகிறது. இனி, சுவாசத்தின் போக்குவரவை ஒழுங்குபடுத்தினால் அதற்கு ஏற்றபடி மனது தெளிவடைகிறது. இத்தத்துவத்தை அறிந்து இதை அனுஷ்டிப்பவர் பிராணாயாமத்தில் ஈடுபடுபவர் ஆகின்றனர்.

வாய் வழியாகச் சுவாசிக்கலாகாது; நாசித்துவாரங்களிலேயே சுவாசித்தல் வேண்டும். நாசியில் உட்கொள்ளும் வாயுவுக்கு அபானன் என்று பெயர். நாசியில் வெளிப்படுத்தும் வாயுவுக்குப் பிராணன் என்று பெயர். அபானனை உள்ளுக்கு இழுப்பதைப் பூரகம் என்று சொல்வார்கள். பிராணனை வெளியில் விடுவதை ரேசகம் என்பர். பூரகம் அல்லது ரேசகம் செய்தான பிறகு வாயுவை உள்ளே அல்லது வெளியில் அடக்குதல் கும்பகம் எனப்படும். இந்த முறையை முரட்டுத்தனமாக உபயோகிப்பவர் நாடி நரம்புகளின் வலிவை இழந்து, மண்டையிடி முதலிய நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

பிரசாந்தமான மனதையுடைய யோகி சிரமப்படாது அளவெடுத்தாற்போன்று ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். கும்பகம் பெரிதும் எல்லார்க்கும் பொருந்தாது. பிராணன், அபானன் ஆகிய இரண்டையும் ஒன்றில் ஒன்றை ஆகுதி செய்வதுபோன்று (அதாவது கொழுந்துவிட்டு எரியும் தீயில் நெய்யை இலேசாகச் சொரிவது போன்று) சுவாசிப்பது சிறந்த பிராணாயாமம் ஆகிறது.

நன்றாக நடப்பவன் கால்களைப்பற்றிய உணர்ச்சி யில்லாது நடப்பதுபோன்று, நன்றாகப் பிராணாயாமம் செய்பவன் சுவாசத்தைப் பற்றிய உணர்ச்சியில்லாது ஒழுங்காகச் சுவாசிக்கிறான். அவனே பிராணாயாமத்தில் முறையாக ஈடுபடுபவன் ஆகிறான். மனது தெளிவு அடையுமளவு பிராணாயாமம் இயல்பாக நடைபெறுகிறது.

30. அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:

அபரே நியதாஹாரா:-வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி, ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி-உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள், ஏதே ஸர்வே அபி-இவ்வனைவரும்
யஜ்ஞவிதோ-வேள்வி நெறியுணர்ந்து, யஜ்ஞக்ஷபிதகல்மஷா:-வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

பொருள் : வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

யோகி ஒருவனுக்கு உண்டி சுருங்கின் உபாயம் பலவுள. உண்பதின் மூலம் உயிரை உயிருக்கு அவன் ஆகுதியாகக் கொடுக்கிறான். இரத்தம் குறைந்துள்ள ஒரு சரீரத்துக்கு மற்றொரு சரீரத்திலிருந்து இரத்தம் எடுத்து அப்போதைக்கப்போதே செலுத்தினால் வலிவும் ஊக்கவும் உண்டாகிறது. இது நவீன மருத்துவம் கையாளும் ஒரு சிறந்த முறையாகிறது. உண்மையில் இயற்கையெங்கும் உயிரைக்கொண்டே உயிர் வளர்கிறது. உயிர் அனைத்தையும் ஒரு பேருயிராகக் கருதி அதன் பொருட்டு அளவு எடுத்தாற்போன் உணவைப் கொடுக்கவும் வாங்கவும் செய்பவன் பிராணனில் பிராணனைச் சொரிகிறான். உயிர் வாழ்க்கையே அவனுக்கு ஒரு யாகமாகிறது.

இது பரியந்தம் (25வது சுலோகத்திலிருந்து 29வது சுலோகம் வரையில்) விதவிதமான யாகங்கள் விளக்கப்பட்டன. மக்களுள் இயல்பு வேறுபாடு ஏராளமாயுண்டு. அவரவர் இயல்புக் கேற்றவாறு வெவ்வேறு யாகங்களைச் செய்ய மக்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். உலக பந்தம் என்னும் பாபத்தினின்று விடுபடுதற்கு யாகம் செய்தல் ஒன்றே உற்ற உபாயம்.

அது எப்படி எனில் :

31. யஜ்ஞஸிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம

குருஸத்தம-குரு குலத்தாரில் சிறந்தோய், யஜ்ஞஸிஷ்ட அம்ருதபுஜ:-வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர், ஸநாதநம் யாந்தி ப்ரஹ்ம-என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள், யஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி-வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை, அந்ய: குத:-வேறு (பர உலகம்) ஏது?

பொருள் : வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?

மனிதன் எத்தொழிலைச் செய்தாலும் அதனால் உலகம் எல்லா நன்மைகளையும் அடையவேண்டும். தன்னலம் பின்னணிக்குத் தள்ளப்படுமளவு அவன் அருந்துவது அமிர்தம். தான், தனது என்ற ஜீவபோதத்தை துறப்பதே இயற்கையின் மேலாம் திட்டம். ஜீவபோதத்தை அடியோடு யாகம் செய்தவனுக்குப் பரபோதம் ஒன்றுதான் எஞ்சி நிற்கிறது. ஆக, தன்னையே ஆகுதியாகக் கொடுத்தவன் அடைவது சநாதன பிரம்மம். பெறுமவற்றுள் பிரம்மத்துக்கு நிகரானது ஒன்றுமில்லை. பெறுதற்கரிய பிரம்மமே யாகத்தின் மூலம் அடையப்பெறுகிறது என்றால் அதற்குக் கீழாகிய எதையும் யாகத்தால் பெறலாம் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

மிக எளிதில் அடையப்பெறுவது இவ்வுலகம்; இதைவிட எளிதானது ஒன்றுமில்லை. ஆனால் இவ்வுலகில் ஒருவன் ஒரு பிராப்தியையும் அடையப்பெறாது, பிறர்க்கு அடிமைப்பட்டு, பிறரால் அவமதிக்கப்பட்டு வாழ்வானாகில் அவன் சுயநலத்தில் ஊறியவனாம். ஒருவனிடத்துச் சுயநலம் வலுக்கின்றவளவு அவன் யாகத்தைப் புறக்கணித்தவனாகிறான். சில நாடுகள், சில சமூகங்கள், சில மனிதர்கள் க்ஷீணதசையடைவதற்குக் காரணம் சுய நலப் பற்றாகும். சுயநலம் நாடுபவன் இவ்வுலகத்தில் ஒரு மேன்மையையும் அடையப்பெறாது மக்களால் புறக்கணிக்கப்படுகிறான். இனி, அவன் சுவர்க்கம் முதலிய, இதைவிட மேலான உலகத்தைப்பெறுவது எங்ஙனம்? அது ஒருபொழுதும் வாய்க்காது. ஆக, வாழ்க்கையின் தத்துவம் யாது எனின்:

32. ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே

ஏவம் பஹுவிதா யஜ்ஞா-இங்ஙனம் பலவித வேள்விகள், ப்ரஹ்மண: முகே-வேதங்களின் வாயிலாக, விததா-விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன, தாந் ஸர்வாந் கர்மஜாந்-அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன, வித்தி-என்று உணர். ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே-இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

பொருள் : பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

பிரம்மா, வேதம், இயற்கை இவை யாவும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள். இயற்கையின் நடைமுறையை அறிபவன் வேதத்தை அறிபவன் ஆகிறான். இயற்கை கர்ம சொரூபமானது. அந்தக் கர்மத்துக்கும் அடிப்படையான திட்டம் ஒன்று உண்டு. அதாவது கர்மத்தை யாகமாக மாற்றுபவர் எல்லாரும் இயற்கை அல்லது வேதத்தின் திட்டத்தைத் தெரிந்துகொண்டவர் ஆகின்றனர். இயற்கையில் நடைபெறுகிற எல்லாக் கர்மங்களையும் யாகமாக மாற்றலாம். கர்மம் மனிதனைப் பந்தப்படுத்தும் தன்மையது. அதே கர்மத்தை யாகமாகச் செய்தால் அது விடுதலையை உண்டுபண்ணுகிறது.

விடுதலை எங்ஙனம் வந்து அமைகிறது? விடை வருகிறது :

33. ஸ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே

பரந்தப பார்த-பரந்தப அர்ஜுனா! த்ரவ்யமயாத் யஜ்ஞாத்-திரவியத்தைக் கொண்டு செய்யப்படும், ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்ரேயாந்-ஞானவேள்வி சிறந்தது, அகிலம் கர்ம: ஸர்வம் -கர்மமெல்லாம், ஜ்ஞாநே பரிஸமாப்யதே-ஞானத்தில் முடிவு பெறுகிறது.

பொருள் : பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.

மனிதன் அறிவைப் பெறுதற்கு உயிர் வாழ்ந்திருக்கிறேன். பொருளைப் பெருக்குவதால் கவலை அதிகம் உண்டாகிறது. ஓரளவுக்குமேல் திரவியம் ஒருவனுக்குப் பயன்படாது. ஞானம் பெறுகின்றவளவு சாந்தியும் மோக்ஷமும் கைகூடும். திரவிய விருத்தி ஜடபுத்தியை உண்டுபண்ணுகிறது. ஞான வளர்ச்சி ஆத்ம சைதன்யமாகிறது. திரவியம் பிரகிருதியில் கட்டுப்படுத்துகிறது. ஞானமோ, ஆத்மாவானது கர்மத்தில் கட்டுப்படாத சாக்ஷி என்ற பேருண்மையை விளக்குகிறது. ஆகையால்தான் யக்ஞமெல்லாம் விரைவில் ஞான யக்ஞமாக வடிவெடுக்கவேண்டும். தேவாராதனையில் ஒருவன் ஒரு மணங்கு கற்பூரத்தை எரித்து அதைப் பெரிய பூஜையென்று எண்ணினான். மற்றொருவன் கற்பூரம் எரிந்தால் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை; அங்ஙனம் கர்மம் ஞானமாய்விடுங்கால் ஜீவபோதத்தில் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை என்று அறிகிறான். முந்தையது திரவிய யக்ஞம்; பிந்தியது ஞான யக்ஞம். சாதகனுக்கு சிரேயஸைத் தருவது ஞானயக்ஞம்.

பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் வாஸ்தவமான மனிதன். பணத்தை எப்படி உபயோகிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் மனிதர்கள் என்ற பெயருக்கு அருகரல்லர்.

ஞானத்தைப் பெறுதற்கு இன்னும் எத்தகைய மனப்பான்மை வேண்டும்? விடை வருகிறது :

34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:

ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும், தத் வித்தி-அதனை அறிந்துகொள், தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள், தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

பொருள் : அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

பண்டம் மாற்றுவது போன்று ஞானத்தைப் பெறமுடியாது. அதற்கேற்ற சீரிய இணக்கத்தை சிஷ்யன் குருவோடு வைத்துக் கொள்ளவேண்டும். வீழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் மூலம் சிஷ்யன் தன்னைக் குருவிடம் ஒப்படைக்கிறான். பந்தம் மோக்ஷம், ஆத்மா அநாத்மா ஆகியவைகளைப்பற்றி முறையாகக் கேள்விகள் கேட்பதால் தனது மனபரிபாகத்தை அவன் தெரிவிக்கிறான். குற்றேவல் புரிவதால் குருவுடைய உடல் வாழ்க்கை என்ற யக்ஞத்தில் சிஷ்யன் தன்னை ஆகுதியாகச் சமர்ப்பிக்கிறான். இங்ஙனம் முறையாக மெய், மொழி, மனம் ஆகிய முக்கரணங்களும் ஆசாரியனுக்கென்றே அர்ப்பிக்கப்படுகின்றன.

அத்தகையவனிடத்து குரு கருணைகூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிக்கிறார். வெறும் வாசாஞானி குருவாகமுடியாது. எரியும் விறகுக்கட்டைதான் மற்றொரு விறகில் தீ மூட்டும். அங்ஙனம் யாரிடத்துப் பிரம்ம ஞானம் பூர்த்தியாயிருக்கிறதோ அவரே சிஷ்யனுக்கும் பிரம்மஞானத்தைப் புகட்டவல்லவராவார். பூரண ஞானமும் கருணையும் யாரிடத்து நிறைந்திருக்கிறதோ அவர் குரு ஸ்தானத்துக்குத் தகுதியுடையவர் ஆவார்.

தனது குருவைக் கேவலம் மனுஷ்யராகக் கருதுபவனுக்குப் பிரார்த்தனையாலும் பக்தியாலும் என்ன பலனுண்டாகக்கூடும்? குருவைக் கேவலம் மனுஷ்யரென அவன் கருதக்கூடாது. ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால், அத் திவ்விய தரிசனத்தின் முதல் அங்கமாகக் குருவைத்தான் சிஷ்யன் காண்கிறான். பிறகு அந்தக் குருவே ஈசுவரனாக மாறி ஈசுவர சொரூபத்தைக் காட்டுகிறார். அப்பால் ஈசுவரனும் குருவும் ஒருவரேயென்று சிஷ்யன் தெரிந்து கொள்கிறான். அவன் விரும்பும் வரங்களையெல்லாம் திவ்விய குரு அருளுவார். இம்மட்டோ! அவனைப் பிரம்ம நிர்வாணமாகிய பரமானந்த சுகத்துக்கும் அழைத்துச் செல்வார். அன்றி, பக்தன், ஈசுவரன் என்ற சம்பந்தமுள்ள துவைத நிலைமையில் அவன் இருக்கவேண்டினும் அங்ஙனமே இருக்கலாம். சிஷ்யன் எதைக் கேட்டாலும் குரு அதை நிச்சயமாகத் தருகிறார்.

மனுஷ்ய குருவானவர் மஹாமந்திரத்தை உனது காதில் மட்டும் உபதேசிக்கிறார். தெய்வ குருவோ, ஆத்மாவுக்குள் சைதன்யத்தைச் செலுத்துகிறார். ஈசுவரனுடைய ரகஸியங்களை அறிய வேண்டுமென்ற தீவிர புத்தி உனக்கு இருக்குமானால், அவ்வீசுவரனே ஸத்குரு ஒருவரை உன்னிடம் அனுப்புவார். பக்தனே, குருவைத் தேடவேண்டிய விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டாம்.

குருவும் சிஷ்யனும் மேலோராய் அமையுமிடத்து :

35. யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்யஸேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி

யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்து கொண்ட பின்னர், பாண்டவ புந: ஏவம் மோஹம்-பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம், ந யாஸ்யஸி-அடைய மாட்டாயோ, யேந பூதாநி அஸேஷாணி-இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி, ஆத்மநி அதோ மயி த்ரக்ஷ்யஸி-நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.

பொருள் : அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

பொருள்களை உள்ளபடி காணாதிருப்பது மயக்கம். மெய்ஞ் ஞானம் உதயமாகுமிடத்து எல்லாப் பொருள்களும், உயிர்களும் ஒரே பரம்பொருளிடத்து ஒன்றித்திருப்பது பிரத்தியக்ஷமாகும். ஒன்றென உணர்வது ஞானம்; பலவாகக் காண்பது அக் ஞானம்.

ஞானத்தீயில் பாபச் செயல்களெல்லாம் வெந்து ஒழிகின்றன. எப்படி யெனின் :

36. அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி

ஸர்வேப்ய: பாபேப்ய: அபி-பாவிகளெல்லாரைக் காட்டிலும், பாபக்ருத்தம: அஸி சேத்-நீ அதிகப் பாவியாக இருந்தாலும், ஜ்ஞாநப்லவேந ஏவ-ஞானத்தோணியால், ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி-அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்.

பொருள் : பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.

பாபம் என்னும் சொல்லில் புண்ணியமும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால் ஒரேசெயல் பயன்படுத்துதற்கு ஏற்றவாறு புண்ணியமாகவோ பாபமாகவோ காட்சி கொடுக்கிறது. ஞானமில்லாதவர்கள் கர்மத்தை முறைதவறிச் செய்து அதைப் பாபமாகக்கிக் ள்கின்றனர். ஞானமுடையவர் அதே கர்மத்தை முறையாகச் செய்து அதைப் புண்ணியமாக மாற்றுவது மல்லாது கர்ம பந்தத்திலிருந்தும் விடுபடுகின்றனர். ஞானம் பாபத்தை எப்படிப் போக்குகிறது? அது ஒரு உபமானத்தால் விளக்கப்படுகிறது.

37. யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா

அர்ஜுந-அர்ஜுனா! யதா ஸமித்த அக்நி-நன்கு கொளுத்துண்ட தீ, ஏதாம்ஸி பஸ்மஸாத் குருதே-விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ, ததா ஜ்ஞாநாக்நி:-அதே போல ஞானத் தீ, 
ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே-எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

பொருள் : நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

பிராரப்த கர்மத்தைத் தவிர மற்ற கர்மங்களெல்லாம் வெந்து போகின்றன. வெந்துபோன விதை பழைய வடிவத்தோடு இருப்பினும் அதை விதைத்தால் செடியாக முளைக்காது. அங்ஙனம் ஞானத் தீயானது கர்மங்களை அவித்துவிடுகிறது. பிராரப்த கர்மம் மட்டும் வேலை செய்யும் எனினும் அதற்கு வேகம் கிடையாது. சொப்பனத்தில் பயந்து எழுந்த ஒருவனுக்கு ஹிருதயம் துடிதுடிக்கிறது. எனினும் விழித்துக்கொண்ட பிறகு அதில் கேடு ஒன்றுமில்லை. அங்ஙனம் பிராரப்த கர்மமும் ஞானியை ஒன்றும் செய்யாது.

ஞானம் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததனால் :

38. ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி

இஹ ஜ்ஞாநேந ஸத்ருஸம்-இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல், பவித்ரம் ஹி ந வித்யதே-தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை, தத் காலேந யோகஸம்ஸித்த:-தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன், ஸ்வயம் ஆத்மநி விந்ததி-தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்.

பொருள் : ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.

கனவில் ஒருவன் அடியுண்கிறான்; குத்துப்படுகிறான்; பெருந்துன்பத்துக்கு ஆளாகிறான். அப்படி அவன் வருந்துகையில் தூக்கத்தினின்று அவனைத் தட்டியெழுப்பினால் ஜாக்கிரதாவஸ்தைக்கு வருகிறான். தன்னைப்பற்றிய உண்மை ஞானம் ஓரளவு ஜாக்கிர தாவஸ்தையில் வருகிறது. தன்னை யாரும் துன்புறுத்தவில்லை யென்றும், தான் உண்மையில் வருந்தவில்லையென்றும் ஜாக்கிரதா வஸ்தையில் அவன் உறுதிப்படுத்துகிறான். அந்த அளவில் விழிப்பானது அக்ஞான மலத்தினின்று அவனைத் தூயவனாக்குகிறது. இங்ஙனம் மனிதனுக்குத் தன் சொரூப ஞானம் உதயமாகுங்கால் ஜனன மரணம் என்ற அக்ஞான அழுக்கினின்று நித்திய சுத்தனாக மாற்றப்பெறுகிறான். ஆகையால்தான் பரிசுத்தப்படுத்துபவைகளுள் ஞானத்துக்கு நிகரானது ஒன்றுமில்லை. முறையாகக் கர்மயோகம் செய்பவன் வாழ்க்கையையே ஞான யக்ஞமாகச் செய்துகொள்கிறான். அதனால் நாளடைவில் மன பரிபாகம் அடைந்து ஞானத்தை நிச்சயமாகப் பெறுகிறான்.

கர்ப்பவாசம் செய்யும் சிசு பத்துமாசத்தில் பிறக்கிறது. அதுபோன்று காலக்கிரமத்தில் என்பதற்கு வரையறை இல்லை. அதற்கு விடை வருகிறது :

39. ஸ்ரத்தாவாம்லூல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி

ஸம்யதேந்த்ரிய:-இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக, தத்பர: ஸ்ரத்தாவாந்-சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன், ஜ்ஞாநம் லபதே-ஞானத்தையடைகிறான், ஜ்ஞாநம் லப்த்வா-ஞானத்தையடைந்த பின், அசிரேண பராம் ஸாந்திம் அதிகச்சதி-விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.

பொருள் : பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.

குருவை வணங்குதல், கேட்டல், பணிவிடை செய்தல் ஆகிய இவையாவும் சில சமயங்களில் வெளி வேஷமாய்ப் போய்விடலாம். ஆனால் எவ்விடத்தில் உண்மையான சிரத்தையும், ஞான முயற்சியும், புலனடக்கமும் மேலோங்கியிருக்கின்றனவோ அங்கு ஞான வளர்ச்சி உருவெடுப்பது உறுதி. சிரத்தை முதலியவைகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஞானம் விரைவில் வந்தமையலாம்; பல ஜன்மங்களில் அது கைகூடலாம்; ஒரே ஜன்மத்தில் வந்தமையலாம்; சில வருஷங்களில் சித்தியாகலாம். ஒரு வருஷம், ஒரு கணப்பொழுது-இப்படித் தீவிரத்துக்கு ஏற்றவாறு காலம் குறுகுகிறது. ஞானத்தை அடைபவன் எல்லாம் ஈசுவரனிடத்து அடங்கப் பெற்றிருப்பதாகக் காண்பது மட்டுமல்ல, ஞானத்துக்கு ஏற்ற சாந்தியை அல்லது முக்தியையும் அக்கணமே பெறுகிறான்.

சம்சயம் வாழ்க்கைக்குச் சத்துருவாகிறது. அது எப்படி எனின் :

40. அஜ்ஞஸ்சாஸ்ரத்ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந:

அஜ்ஞ ச ஸ்ரத்ததாந் ச-அறிவும் சிரத்தையுமின்றி, ஸம்ஸயாத்மா விநஸ்யதி-ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான், ஸம்ஸயாத்மந: அயம் லோக: ந அஸ்தி-ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை, பர: ந ஸுகம் ச ந-மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

பொருள் : அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

ஆத்ம சொரூபத்தை அறியாதவன் அறிவிலி அல்லது அக்ஞானியாவான். தன் மீதும், குரு மீதும், சாஸ்திரத்திடத்தும் நம்பிக்கை வைக்காதவன் சிரத்தையில்லாதவனாகிறான். உலகத்தில் எல்லாரிடத்தும் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர் சிலர் இருக்கின்றனர். அத்தகையவர் ஐயமே வடிவெடுத்தவர் ஆவர். யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் அவையெல்லாம் தமக்குக் கேடு விளைவிக்கும் என்றே அன்னவர் கருதுகின்றனர். இம்மைக்குத் தகுதியுடையவனே மறுமைக்கும் தகுதியுடையவன் ஆகிறான். உலகத்தவரை நம்புகிறவளவு உலகத்தவர் ஒரு மனிதனுக்கு உரியவர் ஆகின்றனர். பரஸ்பர நம்பிக்கையிலும் உதவியிலுந்தான் உலக வாழ்க்கையில் சுகம் உண்டாகிறது. ஒருவரையும் நம்பாது உலகத்தவருக்கு வேற்றானாயிருப்பதே பெரிய வேதனையாகிறது. இத்தகைய பான்மையுடையவனுக்கு ஆத்ம ஞானம் கைகூடாது; வாழ்க்கைக்கும் அவன் தகுதியற்றவனாகிறான்.

நம்பிக்கையில் குழந்தையைப்போல ஆனாலொழிய ஈசுவரனைக் காண்பது துர்லபம். யாரேனும் ஒருவனைச் சுட்டிக்காட்டி, அவன் உன் சகோதரன் என்று தாய் ஒரு குழந்தையிடம் சொன்னால் அக் குழந்தை அவள் சொல்வதை உண்மையெனவே நம்பும். இப்படிப்பட்ட குழந்தையின் விசுவாசம் எவனிடமிருக்கிறதோ அவனிடந்தான் ஈசுவரனுக்குக் கருணை பிறக்கிறது. எல்லாவற்றிலும் கணக்குப் பார்க்கும் சுபாவத்துடனிருந்தால் ஈசுவரனைக் காணவே முடியாது.

ஐயத்தை அகற்றுவதற்கு உற்ற உபாயம்:

41. யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஸயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய

தனஞ்ஜயா!-அர்ஜுனா, யோக ஸந்ந்யஸ்த கர்மாணம்-யோகத்தால் செய்கைகளைத் துறந்து, 
ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்ஸயம்-ஞானத்தால் ஐயத்தை அறுத்து, ஆத்மவந்தம்-தன்னைத் தான் ஆள்வோனை, கர்மாணி ந நிபத்நந்தி-கட்டுப்படுத்த மாட்டா.

பொருள் : யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.

மீன் சேற்றுக்குள் புதைந்திருந்தும் சேற்றின் அழுக்கு அதன் மீது படிவதில்லை. ஓயாது கர்மம் செய்தும் அதில் கட்டுப்படாதவன் யோகி. உலகத்தைப்பற்றிய உண்மையை உள்ளபடி அறியுமளவு அதன்மீது சந்தேகம் நீங்கி சிரத்தை அதிகரிக்கிறது. அது பூரண ஞானமாகப் பரிணமிக்குமிடத்து எல்லாம் ஒரு பொருளின் பல்வேறு தோற்றம் என்ற ஐக்கிய புத்தி உண்டாகிறது. ஐயம் கொள்ளுதற்குப் பின்பு இடமில்லை. அனைத்திடத்தும் பூரண விசுவாசம் மேலிடும். ஆத்மபோதம் அடையப்பெற்ற நிறை மனிதன் ஆகிறான் அவன். நிறைகுடம் நீர் தளும்புவதில்லை. நிறை மனிதன் கர்மத்தில் தளையுறுவதுமில்லை; கர்மத்தை அவன் செய்யாது நிறுத்திவிடுவதுமில்லை.

42. தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:
சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத

தஸ்மாத் பாரத-ஆகவே பாரதா, ஹ்ருத்ஸ்தம்-நெஞ்சில் நிலைகொண்டிருக்கும், 
அஜ்ஞாநஸம்பூதம் ஆத்மந: ஏநம் ஸம்ஸயம்-அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை, 
ஜ்ஞாந அஸிநா: சித்த்வா-ஞானவாளால் அறுத்து, யோகம் ஆதிஷ்ட: உத்திஷ்ட-யோக நிலைகொள், எழுந்து நில்.

பொருள் : அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.

எல்லாக் கேடுகளையும் உண்டுபண்ணுவது சந்தேகம். அது அக்ஞானத்தில் பிறந்து அந்தக்கரணத்தில் குடியிருக்கிறது. வெளிச்சம் வந்தால் இருள் தானே மறைவது போன்று ஆத்ம ஞானம் ஒன்றே ஐயத்தை அகற்றுதற்கு உற்ற உபாயம்.

கேடு, தாபம், தவறு இவைகளை ஒழிக்கவல்லது ஞானம். சூரியோதயத்தில் வெளிச்சமும் வருகிறது; விழிப்பும் வருகிறது; வினையாற்றுகிற பான்மையும் வருகிறது. அங்ஙனம் ஆத்ம ஞானத்தில் ஆத்ம போதமும்; வினையாற்றும் வல்லமையும்சேர்ந்து வருகின்றன. ஆத்மபோதம் என்னும் விழிப்பைத் தருவதுதான் ஜீவன் ஒருவனுக்குச் செய்யும் சேவைகளில் தலைசிறந்ததாகிறது. விழித்துக்கொண்ட மனிதன் வாழ்க்கையில் தன் வல்லமையைக் காட்டுவான்.

சீதையைத் தேடித் தேன் திசைக்குச் சென்ற ஆஞ்ஜனேயனுக்குக் கடல் கரையில் ஐயம் வந்து அல்லல்படுத்தியது. ஆனால் அவனது நிஜசொரூபத்தை ஜாம்பவான் அவனுக்கு ஞாபக மூட்டினான். உடனே ஆத்மபோதம் பெற்று எழுந்திருந்தான். ஐயம் அகன்றது. அரும் செயலுக்கு அவன் அருகதையுடையவனானான்.

இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஞானகர்ம ஸந்யாஸ யோகோ நாம
சதுர்த்தோऽத்யாய:

தொடரும்...


நன்றி வணக்கம் 
ஹரிமணிகண்டன்
 Harimanikandan.V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

1 comment:

  1. Dear Sir,
    You are work is awesome!! God definitely blessed you with all!!
    In this chapter-4, you mentioned "மூன்றாம் அத்தியாயம்" என்று
    தமிழில் குறிப்பட்டுள்ளீர்கள். please advise is this 3rd chapter or
    4th chapter?
    Thanks for understanding,
    kind Regards,
    Rudrapathy

    ReplyDelete