Saturday, November 3, 2012

Tamil Bhagavad Gita Chapter - 08



Tamil Bhagavad Gita Chapter - 08


ஸ்ரீ மத் பகவத்கீதை எட்டாம் அத்தியாயம் 

Tamil Srimad Bhagavad Gita Chapter - 8 






அர்ஜுந உவாச


1. கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புரு÷ஷாத்தம 
அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே  

அர்ஜுந உவாச-அர்ஜுனன் செல்லுகிறான், புரு÷ஷாத்தம தத் ப்ரஹ்ம கிம்?-புரு÷ஷாத்தமா, அந்த பிரம்மம் எது? அத்யாத்மம் கிம்-ஆத்ம ஞானம் யாது? கிம் கர்ம-கர்மமென்பது யாது?
அதிபூதம் கிம் ப்ரோக்தம்-பூத ஞானம் என்று எது அழைக்கப் படுகிறது? அதிதைவம் கிம் உச்யதே-தேவ ஞானம் என்பது எதனை அழைக்கிறார்கள்?

பொருள் : அர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புரு÷ஷாத்தம, கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?

2. அதியஜ்ஞ: கதம் கோऽத்ர தேஹேऽஸ்மிந்மதுஸூதந 
ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி:  

மதுஸூதந! அதியஜ்ஞ: அத்ர க:-யாகஞானம் என்பதென்ன? அஸ்மிந் தேஹே கதம் ?-இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்?) ச நியதாத்மபி:-மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால், 
ப்ரயாணகாலே கதம் ஜ்ஞேய: அஸி-இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்?

பொருள் : யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?

இவ்விரண்டு சுலோகங்களில் அடங்கிய ஏழும் அறியத் தகுந்த பொருள்கள் ஆகின்றன. முன் அத்தியாயத்தின் இறுதியில் வந்த சுலோகங்கள் இரண்டும் இக்கேள்விகளுக்கு இடந்தருகின்றன. ஆகவே, அர்ஜுனன் அவைகளைக் கேட்கிறான்.

ஸ்ரீ பகவாநுவாச

3. அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோऽத்யாத்மமுச்யதே 
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:  

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ப்ரஹ்ம அக்ஷரம் பரமம்-அழிவற்ற பரம்பொருளே பிரம்மம், ஸ்வபாவ: அத்யாத்மம் உச்யதே-அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும், பூதபாவ: உத்பவகர:-உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை, விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:-இயற்கை கர்மமெனப்படுகிறது.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.

பிரம்மம் என்பது முழுமுதற்பொருள். அது எக்காலத்திலும் உள்ளது; எங்குமிருப்பது; எக்காரணத்தைக்கொண்டும் அதனிடத்து மாறுதல் உண்டாவது கிடையாது. ஆக, அது கால தேச நிமித்தத்தில் அடிபடாதது. ஆதலால் அதற்கு அக்ஷரம் என்ற பெயர் வந்துள்ளது. இந்திரியங்களுக்கு அது எட்டாதது. ஆகையினால் அது பரமம் என்றும் பகரப்படுகிறது. அண்டங்கள் அனைத்துக்கும் பரப்பிரம்மம் இருப்பிடமாகிறது.

ஒரு மனிதன் கோபிக்கும் தன்மையுடையவனாயிருக்கிறான். அது அவனுடைய ஸ்வபாவம் என்கிறோம். மற்றொருவன் யாண்டும் நேசிக்கும் தன்மையுடையவனாயிருக்கிறான். அப்படி இருப்பது அவனுடைய ஸ்வபாவம். அதே பாங்கில் பரப்பிரம்மத்தினுடைய சுபாவம் (ஸ்வபாவம்) உண்டு. எண்ணிறந்த ஜீவாத்மாக்களாகத் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொள்வது பரப்பிரம்மத்தின் ஸ்வபாவமாகும். அந்த ஸ்வபாவமே அத்யாத்மம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தேகத்தினுள்ளும் நான் என்னும் சொல்லுக்கு இலக்காக அது இருக்கிறது. அலைகள் கடலில் ஒடுங்குவதுபோன்று இந்த ஜீவர்கள் அனைத்தும் பரப்பிரம்மத்தில் ஒன்றுபடும் தன்மையனவாம்.

இயற்கையின் நடைமுறை அனைத்துக்கும் கர்மம் என்பது பொதுப்பெயர். மனிதனுடைய தோற்றத்துக்கும் முன்னேற்றத்துக்கும் முதற் காரணமாயிருக்கும் கர்மமே இங்கு கர்மம் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. அது ஆக்கத்துக்கு ஏதுவாயுள்ள நற்செயலாம். ஒவ்வொரு படித்தரத்திலும் மனிதனை மேலோன் ஆக்குவது எதுவோ, அது கர்மம். ஆறு சாஸ்திரங்களில் ஒன்றாகிய பூர்வமீமாம்ஸம் கர்மத்துக்கு உயர்ந்தது ஒன்றுமில்லை என்கிறது. கர்மத்தின் மூலம் எதையும் பெறலாம் என்பது அதன் கோட்பாடு.

4. அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஸ்சாதிதைவதம் 
அதியஜ்ஞோऽஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர:  

க்ஷரோ பாவ: அதிபூதம்-அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம், புருஷ அதிதைவதம் ச-புருஷனைப் பற்றியது தேவ ஞானம், தேஹப்ருதாம் வர:-உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! அத்ர தேஹே அஹம் ஏவ அதியஜ்ஞ:-உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.

பொருள் : அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.

அதிபூதம் : தேகம் முதலிய அழியும் தன்மையுடையவைகள் இப்பெயர் பெறுகின்றன. சைதன்யத்துக்கு அன்னியமானவைகள் எனினும், இவைகள் சைதன்யத்தைச் சார்ந்திருக்கின்றன. பிராணிகள் உயிர் பெற்றிருப்பதற்கு பூதங்கள் இன்றியமையாதவைகளாம்.

புருஷன் : புரியிலே சயனிப்பவன் புருஷன். அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக்கொண்டு, அதில் நீக்கமற நிறைந்திருக்கிறவன் புருஷன்.

அதிதெய்வம் : ஹிரண்யகர்ப்பன், எல்லார்க்கும் முதலிலே உடலை எடுத்தவன், சுயம்பு அல்லது பிரம்மதேவனை இப்பதம் குறிக்கிறது. ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு வியக்தி இருப்பது போன்று, ஜீவத்தொகுதிக்கு உள்ள வியக்தியே பிரம்மதேவன் ஆகிறது.

அதியக்ஞம் :- ஜீவன் தன்னை அடியோடு இறைவனிடத்து ஆஹுதியாகக் கொடுத்துவிடும்பொழுது யக்ஞம் உச்ச ஸ்தானம் பெறுகிறது. தன்னைக் கடவுளுக்குக் கொடுத்துவிடுங்கால் ஜீவ போதம் அழிகிறது; பரபோதம் தோன்றுகிறது. ஆக, அதியக்ஞம் நடைபெறுகிற இடத்தில் பரமாத்மாவின் சான்னித்தியம் காணப்பெறுகிறது. முதிர்ந்த சாதகர்களிடத்தும் ஸித்த புருஷர்களிடத்தும் ஈசுவர சான்னித்தியம் தெளிவுறத் தென்படுவது போன்று வேறு எங்கும் அப்பாங்கில் காணமுடியாது. மானிட சரீரம் எடுத்ததன் முடிவான பலனும் இதுவே. தன்னை இறைவனுக்குக் கொடுப்பவனே உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவன் ஆகிறான்.

எவனுடைய உடலும் உள்ளமும் பூரணமாக ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அவன்தான் உண்மையான ஸாது. ஸதா ஸர்வகாலமும் ஈசுவரனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பான். அவ்வீசுவரன் எல்லா ஜீவர்களிடத்தும் இருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டு எல்லாருக்கும் தொண்டு செய்வான். இவைகள்தான் உண்மையான ஸாதுவின் முக்கியமான அடையாளங்கள்.

5. அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் 
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸய:  

ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந்-எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன், கலேவரம் முக்த்வா ப்ரயாதி-உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்), ஸ: மத்பாவம் யாதி-எனதியல்பை எய்துவான், நாஸ்தி அத்ர ஸம்ஸய:-இதில் ஐயமில்லை.

பொருள் : இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.

என் சொரூபம் என்பது முழுமுதற் பொருளாகிய விஷ்ணு அல்லது பரத்தினைக் குறிக்கிறது. உடலை உகுக்கும்பொழுது ஜீவன் பரத்தினைப் பாவிக்க வல்லவனாயின், அவன் மீண்டும் பிறவாது பரத்தினை அடைகிறான். இது விதேக முக்தி எனப்படும். இவ்விதிக்கு விலக்கு இல்லை. ஆகவே இதைப்பற்றி ஐயம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இறைவனை நினையாது வேறு எண்ணத்தோடு உயிர் விடுகின்றவர்களது நிலை என்னாகிறது என்னும் கேள்வி பிறக்குமிடத்து :

6. யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் 
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:  

கௌந்தேய! அந்தே-குந்தியின் மகனே! மரணத்தருவாயில், யம் யம் பாவம் வா ஸ்மரந் அபி-எந்தெந்த ஸ்வரூபத்தை சிந்தித்த வண்ணமாய், கலேவரம் த்யதி-உடலைத் துறக்கின்றானோ, 
ஸதா தத்பாவ பாவித:-எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய், தம் தம் ஏவ ஏதி-அந்த அந்த ஸ்வரூபத்தையே அடைகிறான்.

பொருள் : ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.

சொப்பனத்தில் தோன்றுகிற வடிவம் தன் மனதால் சிருஷ்டிக்கப்பட்டது. விலக்கமுடியாது தன் முன்னிலையில் அது நிற்பதுபோன்று சாகும் தறுவாயில் ஓர் எண்ணம் மனதில் தோன்றுகிறது. வாழ்நாளில் அது ஆழ்ந்து நெடிது எண்ணப்பட்டதோ அதுதான் அப்பொழுது முன்னணியில் வந்து நிற்கிறது. மேலும் வரும் பிறப்பானது அந்த எண்ணத்தின் ஸ்தூல அமைப்பாம். ஆக, இனி வரும் ஜன்மத்தை விரும்பியபடி மாற்றலாம்.

இம்மையிலும் மறுமையிலும் நலம் நாடும் ஒருவன் இடையறாது செய்ய வேண்டியது யாது எனின் :

7. தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச 
மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஸயம்  

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு-ஆதலால், எல்லாக் காலங்களிலும், மாம் அநுஸ்மர:-என்னை நினையுத்ய ச-போர் செய், மயி அர்பித மந: புத்தி:-என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால், அஸம்ஸயம் மாம் ஏவ ஏஷ்யஸி-ஐயமின்றி என்னையே பெறுவாய்.

பொருள் : ஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.

போர் புரி என்கிறார் பகவான். அர்ஜுனனுடைய ஸ்வ தர்மத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லாரும் அவரவர் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதாகிறது.

இறைவனை உபாசிக்கின்றவர்கள் பலர் உலகக் கடமைகளைப் புறக்கணிக்கின்றனர். உலக வியவகாரங்களைச் செய்கின்றவர்கள் அநேகர் கடவுளை மறக்கவும் செய்கின்றனர். ஈசுவர சிந்தனையும் தொழில் புரிதலும் ஒன்றோடொன்று ஒவ்வாது என்பது அவர்கள் எண்ணம். ஆனால் காயத்தால் கடமைகளைச் செய்துகொண்டிருக்கையில் கருத்தைக் கடவுளிடம் செலுத்தவேண்டும் என்பது கண்ணனது கோட்பாடு. இத்தகைய பயிற்சி இகபரமிரண்டுக்கும் சாதனமாகிறது.

தெருப்பாடகன் ஒரு கையால் சுருதி மீட்டிக்கொண்டும், மற்றொரு கையால் ஒருவகை மேளத்தைத் தட்டிக்கொண்டும், அதே சமயத்தில் பாடிக்கொண்டுமிருக்கிறான். அதைப்போல உலக பந்தத்துக்குட்பட்ட மனிதன் தனக்கேற்பட்ட காரியங்களைக் கைகளால் செய்துகொண்டிருக்கையிலும் பகவந் நாமத்தை முழுமனதோடு சொல்லி, அவனைச் சிந்தனை பண்ணுவதை மறக்கக்கூடாது.

பரத்தினைச் சாரும் வழி :

8. அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா 
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்  

பார்த! ந அந்ய காமிநா-பார்த்தா! வேறிடஞ் செல்ல விரும்பாமல், யோக அப்யாஸ யுக்தேந சேதஸா-யோகம் பயிலும் சித்தத்துடன், அநுசிந்தயந்-சிந்தனை செய்து கொண்டிருப்போன்
திவ்யம் பரமம் புருஷம்-தேவனாகிய பரம புருஷனை, யாதி-அடைகிறான்.

பொருள் : வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.

உபாசனா மூர்த்தியைப் பற்றிய தியானத்தை வாழ்நாள் முழுதும் விடாது திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பது அப்பியாச யோகமாகிறது. சூரியனைப்போன்று சுயம்பிரகாசமுடையவன் தேஜோமயமான புருஷனாகிறான். அவன் புரி என்னும் தேகத்தின்கண் எழுந்தருளியிருக்கிறான் என்பது இயம்பப்பட்டது. நாள்தோறும் அவனை ஒழுங்காக நினைக்க நினைக்க உடல் ஞாபகம் குறைந்து போகிறது. பழுத்த பழம் மேல் தோலினின்று பிரிவதுபோன்று ஆத்மபோதமானது தேக உணர்ச்சியைக் கடந்து மேலோங்குகிறது. அத்தகைய பரிபாகம் அடைந்த யோகியை மரணகாலம் நன்கு விளக்கிக் காட்டுகிறது. எப்படி எனின் :

9. கவிம் புராணமநுஸாஸிதார
மணோரணீயாம்ஸமநுஸ்மரேத்ய: 
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப
மாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்  

10. ப்ரயாணகாலே மநஸாசலேந 
பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ 
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக் 
ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்  

கவிம் புராணம்-அறிவாளியானவரை, பழமையானவரை, நுஸாஸிதாரம்-எல்லாவற்றையும் ஆள்பவரை, அணோ: அணீயாம்ஸம்-அணுவைக் காட்டிலும் நுண்ணியவரை, ஸர்வஸ்ய தாதாரம்-எல்லாவற்றையும் தாங்குபவரை, ஆதித்யவர்ணம்-சூரியனின் நிறம் கொண்டிருப்பவரை, அசிந்த்யரூபம்-எண்ணுதற்கரிய வடிவுடையவரை, தமஸ: பரஸ்தாத்-அஞ்ஞான இருளுக்கு அப்பற்பட்டவரை, ய: அநுஸ்மரேத்-எவன் நினைக்கிறானோ.

ப்ரயாணகாலே-இறுதிக் காலத்தில், அசலேந மநஸா-அசைவற்ற மனத்துடன், ப்ருவோ: மத்யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்ய-புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்த்யா யோகபலேந ச யுக்த:-பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு), தம் திவ்யம் பரம் புருஷம் உபைதி-அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.

பொருள் : கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ,

பொருள் : இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான். (9-10)

இத்தகைய உயர்நிலையில் மனதையும் பிராணனையும் வைத்து, உடலை உகுப்பவனுக்கு பரம்பொருளோடு ஒன்றித்தல் அல்லது பிரம்ம நிர்வாணம் அடைதல் சாத்தியப்படுகிறது. அதற்காக அப்பியாச யோகம் உறுதியாதற்கு நாள்தோறும் சிந்தையில் வைக்கவேண்டிய இஷ்ட மூர்த்தியின் அஷ்ட குணங்கள் ஈண்டு வர்ணிக்கப்படுகின்றன. அவையாவன:

1. கவி-சர்வக்ஞன், அனைத்தையும் அறிபவன். எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் அறிவுக்கு அறிவாய், நுண்ணுணர்வாய் இருப்பதை உன்னிப்பார்க்க. 2. புராணன்-பழையவன்; பரமாத்மாவுக்கு முன்னவன் யாருமில்லை. 3. அனுசாஸிதாரம்-உலக நடைமுறை என்ன போக்கில் இருக்க வேண்டுமென்று ஆணையிடுபவன். 4. அணோரணீயாம்ஸம்-சூக்ஷ்மத்தில் மிக சூக்ஷ்மம்; நுணுக்கரிய நுண்மையன். 5. ஸர்வஸ்ய தாதாரம்-தோன்றிய யாவுக்கும் இருப்பிடமாயிருப்பவன் கானல் நீருக்குக் கானல் இருப்பிடமாவது போன்று, அவனிடத்துத் தோன்றிய உலகுக்கு அவனே இருப்பிடமாகிறான். 6. அசிந்த்யரூபம்-சித்தியடையாத சித்தத்தால் அவனது வடிவம் கிரகிக்கப்படாதது. 7. ஆதித்திய வர்ணம்-சூரியனுடைய நிறம் என்றும் மாறாதது. சூரியன் உதிப்பதுமில்லை, அஸ்தமனம் ஆவதுமில்லை. அதுபோன்று பரமாத்மா சைதன்ய வடிவினன். அவனுடைய சைதன்யத்தில் மாறுதல் ஒன்றும் ஏற்படுவதில்லை. 8. தமஸ: பரஸ்தாத்-மேகம் சூரியனை ஒரு நாளும் மறைப்பதில்லை. அவ்வாறே அக்ஞான இருள் ஆத்ம சைதன்யத்தைப் பாதிப்பதில்லை.

அசல மனசு, பக்தி, யோகபலம்-இம் மூன்றும் நெருங்கிய தொடர்வுடையவைகள். எக்காரணத்தை முன்னிட்டும் தளர்வடையாத மனது அசலத்தில் பிரதிஷ்டை பெற்றதாகிறது. தூய அன்பே வடிவெடுத்துள்ள மனது பக்தியில் நிலைபெற்றதாகிறது. யோக சாதனங்களை முறையாகவும் தீவிரமாகவும் அனுஷ்டிக்கின்றவர்களுக்கு இவை அமைவதால் யோகபலம் என்று இவை பெயர் பெறுகின்றன. ஆத்ம சாதனங்களெல்லாம் ஒருவனை பலவான் ஆக்குகின்றன.

வலிவுடையவனாக ஆதலே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வருவதற்கு அறிகுறியாகும். உடல் வலிவு பெற்றுக் கொண்டு வரவர, ஒருவன் வளர்ச்சியடைகிறான். மனவலிவும் வளர்ச்சியைக் குறிக்கிறது. அறிவின் வலிவு அதிலும் மேலானது. யானைப்பாகன் யானையை அடக்கியாளுதலே அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். சமுதாயத்தில் அறிவுடையோர் மற்றவர்களைத் தங்கள் காரியத்துக்குப் பயன்படுத்துவதை எக்காலத்திலும் எவ்விடத்திலும் காணலாம். ஆத்மபலத்தில் ஏனைய பலங்களெல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆத்மபலம் அடையப் பெற்றவன் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. மரணத்தை வென்று, அதற்கு அஞ்சாத வீரன் அஞ்சுதற்கு உரியது வேறு எதுவும் எவ்வுலகிலும் இல்லை. எதற்கும் அஞ்சாத பலவான் ஆவதே கீதையின் குறிக்கோள் என்பது இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்திலேயே விளக்கப்பட்டுள்ளது.

புருவங்களுக்கு மத்தியில் பிராணனை வைத்தல் : விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அக்ஞானி ஒருவனுக்கு அந்திய காலத்தில் பிராணன் நவத்துவாரங்களில் கூட்டைவிட்டுப் போகிறது. ஞானிக்கோ அது புருவத்தின் மத்தியில் நின்று, உச்சந்தலையில் பிரம்மரந்தரத்தின் வாயிலாக வெளியேகுகிறது.

11. யதக்ஷரம் வேதவிதோ வதந்தி 
விஸந்தி யத்யதயோ வீதராகா: 
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி 
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே  

யத் அக்ஷரம் வேதவித: வதந்தி-எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், வீதராகா: யதய: யத் விஸந்தி-விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர், யத் இச்சந்த: ப்ரஹ்மசர்யம் சரந்தி-எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், தத் பதம் தே-அந்த பதத்தைப் பற்றி உனக்கு, ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே-சுருக்கமாகச் சொல்லுகிறேன்

பொருள் : எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

இயற்கை என்கிற வேதத்தை முறையாக ஆராய்ந்துபார்த்தாலும் சரி; தத்துவ தரிசனம் அடையப்பெற்ற ஆன்றோர்கள் திருவாய் மலர்ந்தருளிய வேத சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்த்தாலும் சரி; அவைகள் வாயிலாக உண்மையொன்று நமக்கு விளங்கும். அழியும் இயல்புடைய இப்பிரபஞ்சத்தினுள்ளே, இதற்கு ஆதாரமாக நிலை பொருளொன்று உள்ளது. அது குணம் குறியற்ற நிர்குணப் பிரம்மம். அக்ஷரம் அல்லது அழிவற்றது எனப்படுவதும் அதுவே. நிராசையில் நிலைநின்று, பிரம்மசரிய விரதத்தை முறையாக அனுஷ்டிக்கின்றவர்களே சந்யாசிகள் ஆகின்றனர்.

பாதரசம் பூசிய கண்ணாடியில் முகம் நன்றாகப் பிரதிபிம்பிப்பது போன்று பிரம்மசரியத்தை நன்றாக அனுஷ்டிக்கின்றவர் உள்ளத்தில் அந்தப் பிரம்மத்தைப்பற்றிய ஞானம் உண்டாகிறது. நைஷ்டிக பிரம்மசாரிகளிடத்து மேதா என்னும் நாடி உண்டாகிறது. அது பேரறிவையும் பிரம்ம ஞானத்தையும் வளர்க்க வல்லது.

ஆத்ம சாதகன் ஒருவன் காமங்கொண்டவனாகப் பெண்களின் படத்தையும் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது.

12. ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச 
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்  

13. ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் 
ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்  

ஸர்வத்வாராணி ஸம்யம்ய-எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மந: ஹ்ருதி நிருத்ய-மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, ப்ராணம் மூர்த்நி ஆதாய-உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி, ஆத்மந: யோகதாரணாம் ஸ்தித:-யோக தாரணையில் உறுதி பெற்று.

ஓம் இதி ஏகாக்ஷரம் ப்ரஹ்ம-ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே, வ்யாஹரந் மாம் அநுஸ்மரந்-ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், ய: தேஹம் த்யஜந் ப்ரயாதி-உடம்பைத் துறந்து, பரமாம் கதிம் யாதி-பரமகதி பெறுகிறான்.

பொருள் : எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,

பொருள் : ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான். (12-13)

யோகி ஒருவனுக்கு உடல் வாழ்க்கை முற்றுப் பெறுகிற நிலை இதுவாம். நதியானது கடலினுள் நுழைவது போன்று யோகியினுடைய ஜீவபோதம் பரபோதமாக மாறியமைகிறது. அதாவது உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. அப்பொழுது பொறிவாயில்களாகிய கண், செவி, மூக்கு முதலியவைகளைப் பற்றிய உணர்ச்சி யோகிக்கு இல்லை. உடல் வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் அவைகள் முரட்டுத்தனமாய் வெளியுலகில் சஞ்சரிக்கவில்லை. தூங்கப் போவது போன்று இப்பொழுது அவைகள் தாமாக ஒடுங்கிவிடுகின்றன. அந்திவேளை வரும்போது, தான் வாசம் செய்யும் மரத்துக்குப் பறவையானது பறந்து வருவது போன்று யோகியின் மனது மரண காலத்தில் ஹிருதயத்தில் அடங்குகிறது. (யோகியர் அல்லாதவர்களுடைய உள்ளம் உலகப் பொருள்களில் பற்று வைத்துப் பரிந்து திரிகிறது.) உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயவத்தையும் விட்டு விலகுகிறது. பிரயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போன்று பிராணன் யோகியின் உச்சந்தலைக்கு வருகிறது. ஆதலால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு மிஞ்சியிருக்கும். (யோகியல்லாதவர்க்குப் பிராணன் வாயில் அல்லது மூக்கில் போவது வழக்கம்.) ஈசுவர சிந்தனை வலுத்து ஈசுவர சொரூபத்தில் மனது ஒன்றித்திருப்பது யோகதாரணையாகும். அப்பொழுது ஓம் என்ற ஓசையொன்றே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஓம் என்னும் ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்விய சொரூபம், அலகில்லா ஜோதி, பேரின்பம், சித் அம்பலம்-இந்நிலையை யோகி அடையப்பெறுகிறான். மற்றவர்களது உடல் போன்று யோகியின் உடலும் பிணமாய் ஒதுக்கப்படுகிறது. வீடுபேறு அடைந்தது யோகியின் சிறப்பு.

ஜீவனானது இவ்வுலகத்தைவிட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக எதைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்குமோ அதற்குரிய உடலில் மறுபடியும் வந்து பிறக்கின்றது. ஆதலால் பக்தி சாதனை மிகவும் அவசியமெனத் தோன்றுகிறது. இடையறாத அனுஷ்டானத்தினால் உலகப் பொருள்களைப் பற்றிய எண்ணம் மனதில் உண்டாகமாட்டாது. ஈசுவரனைப் பற்றிய சிந்தனையே ஆத்மாவினிடம் குடிகொள்ளும். சாகும் தறுவாயிலும் கூட அந்தச் சிந்தனை நீங்குவதில்லை.

சாகும்பொழுது தானாக அந்த நிலை வருகின்றதா? இல்லை. உலகில் வாழ்ந்திருக்கும்போது சாதகன் அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும்.

எப்படி மனதை லயப்படுத்துவது எனின் :

14. அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ: 
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:  

பார்த: ய:-பார்த்தா! எவன், அநந்யசேதா:-பிரிது நினைப்பின்றி, நித்யஸ: ஸததம் மாம் ஸ்மரதி-என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ, நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகிந:-அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு, அஹம் ஸுலப:-நான் எளிதில் அகப்படுவேன்.

பொருள் : நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா. ஈசன் அடியார்க்கு எளியவன். நாம் முழுமனதை அவனிடத்துத் திருப்பாமையால் அவனை அடைகிறதில்லை. பொருள் உடையவர்க்கே மேலும் பொருள் சேருவது போன்று அருள் உடையவர்க்கே மேலும் அருள் வளர்கிறது.

பகவானை நோக்கி நாம் ஓர் அடி வைத்தால் அவன் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறான்.

15. மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமஸாஸ்வதம் 
நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா:  

மாம் உபேத்ய-என்னையடைந்து, பரமாம் ஸம்ஸித்திம் கதா:-பரம சித்தி பெற்ற, மஹாத்மாந:-மகாத்மாக்கள், அஸாஸ்வதம் து:காலயம்-நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய புநர்ஜந்ம ந ஆப்நுவந்தி-மறு பிறப்பை யடைய மாட்டார்.

பொருள் : என்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார்.

மனிதன் தன்னை எதற்குத் தகுதியுடையவனாக்குகின்றானோ அதைத்தான் அவன் பெறுகின்றான். பகவானைப் பெறத் தகுந்தவனுக்கு பகவான் தன்னைக் கொடுத்துவிடுகிறான். பகவானை அடைந்தவனுக்கோ பிறவிப்பிணியில்லை. இறைவனை அடைந்தவன் இன்பமே எந்நாளும், பிறப்பு எப்பொழுதும் மாறுபடும் தன்மையுடையது. பிறவி எது, பிறவாமை எது என்று கேட்குமிடத்து :

16. ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந 
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே  

அர்ஜுந! ஆப்ரஹ்மபுவநாத்-பிரம்மலோகம் வரை, லோகா: புந: ஆவர்திந:-எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன, து கௌந்தேய-ஆனால் குந்தி மகனே! மாம் உபேத்ய-என்னை அடைந்தவனுக்கு, புநர்ஜந்ம ந வித்யதே-மறுபிறப்பு இல்லை

பொருள் : அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.

உலகம் என்பது இங்கு ஆகுபெயர். பிரம்மலோகம் பரியந்தம் எல்லா உலகங்களுக்கும் தோற்றமும் மறைவும் இருக்கின்றன. ஆதலால் அந்த உலகங்களில் உள்ள ஜீவர்களும் பிறக்கவும் இறக்கவும் செய்கின்றனர். அத்தகைய உலகங்களில் அடையும் பேற்றுக்கு பதவி முக்தி என்று பெயர். சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம் என்று அப்பதவி பலதரப்படுகிறது. இப்பதிகள் காலத்துக்கு உட்பட்டவைகள். ஆனால் கிரம முக்தியில் போகின்றவர்கள் வழிப்போக்கர்களாகப் பிரம்மலோகத்தில் தங்குகின்றனர். அவர்கள் மண்ணுலகுக்குத் திரும்பி வருவதில்லை. ஆங்கு அவர்கள் மேலும் பரிபக்குவம் அடைந்து பரத்தினைப் பெறுகின்றனர். ஆனால் இவ்வுலகிலிருந்தே நேர் பரத்தினை அடைகின்றவர்கள் விதேக முக்தி என்னும் பேரின்பவீடு அடைகின்றனர்.

வேகவைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது மறுபடியும் பயிராக முளைக்காது. அதுபோல சித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறு ஜன்மம் அடைவதில்லை.

பிரம்மாவின் நாள்:

17. ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: 
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநா:  

ப்ரஹ்மண: யத் அஹ:-பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது), ஸஹஸ்ர யுக பர்யந்தம்-ஆயிரம் யுகங்களைக் கொண்டது, ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தரம்-இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று, விது:-அறிகிறார்களோ, தே ஜநா: அஹோராத்ரவித:-அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்.

பொருள் : பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.

ஒரு வாரம் என்பதில் ஏழுநாள் அடங்கியிருப்பது போன்று, ஒரு சதுர்யுகத்தில் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களும் அடங்கியிருக்கின்றன. இப்படி ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். இன்னும் ஓர் ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது ஓர் இரவு. இப்படி ஒரு பகலும் இரவும் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஒருநாள். 365 நாள் சேர்ந்தது ஒரு வருஷம். நூறு வருஷம் அவருடைய பூரண ஆயுள்.

இங்ஙனம் காலமானது காலாதீதத்தில் புரண்டோடுகிறது. காலம் எல்லையில் அடங்காதது என்பதும், இடம் அல்லது வெட்டவெளி எல்லையில் அடங்காதது என்பதும் நவீன வான சாஸ்திரம் கற்பவர்களுக்கு நன்கு விளங்கும். நமக்குத் தென்படும் இந்த அண்டம் எவ்வளவு பெரியது என்று அறியுமளவு நமது மனம் அகண்டாகார விருத்தி பெறும். நாம் பற்றுவைத்துள்ள இச்சிறு உடலும் உலகும் மிக அற்பமானவை என்பது அப்பொழுது விளங்கும்.

18. அவ்யக்தாத்வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே 
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே  

அஹராகமே-பிரம்மாவின் பகல் தொடங்கும் போது, ஸர்வா: வ்யக்தய:-எல்லா விதமான சராசர தொகுதிகளும், அவ்யக்தாத் ப்ரபவந்தி-மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன, ராத்ர்யாகமே-இரவு வந்தவுடன், தத்ர அவ்யக்த ஸம்ஜ்ஞகே ஏவ-அந்த மறைவுலகத்திலேயே, ப்ரலீயந்தே-மீண்டும் மறைகின்றன

பொருள் : அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன.

ஒவ்வொரு ஜீவனும் உறங்கப்போகும் பொழுது அவனது உலகம் அவனது உள்ளத்தில் ஒடுங்குகிறது; விழித்து எழுங்கால் அவனது உலகமும் விரிகிறது. அதே போன்று பிரம்மாவின் உறக்க விழிப்பில் அகிலாண்டங்களும் மறையவும் தோன்றவும் செய்கின்றன. இத்தோற்றமும் ஒடுக்கமும் சிருஷ்டி, சம்ஹாரம் எனவும் பெயர் பெறுகின்றன. ஒரு பிரம்மாவுக்கு இங்ஙனம் ஆயுள் முடியும்போது அவர் கிரம முக்தியடைகிறார்.

ஜீவன் ஒருவன் ஜீவபோதத்தில் இருந்துகொண்டே அடையும் பதவிகளில் தலையாயது பிரகிருதி லயம் என்பது. ஒரு பிரம்மா முக்தியடைந்த பிறகு பிரகிருதி லயத்தின் மூலம் அவருக்கு அடுத்தபடி அப்பதவிக்குத் தகுதியாயிருப்பவர் அந்த ஸ்தானத்திற்கு அவரைப் பின்பற்றுகிறார்.

19. பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே 
ராத்ர்யாகமேऽவஸ: பார்த ப்ரபவத்யஹராகமே  

பார்த ஸ: ஏவ அயம்-அர்ஜுனா! அதே இந்த, பூதக்ராம:-உயிரினங்களின் தொகுதிகள், பூத்வா பூத்வா அவஸ:-மீண்டும் மீண்டும் தன் வசமின்றியே, ராத்ர்யாகமே ப்ரலீயதே-இரவு வந்தவுடன் அழிகிறது, அஹராகமே ப்ரபவதி-பகல் வந்தவுடன் பிறக்கிறது.

பொருள் : இந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.

கரும வசப்பட்டிருப்பதால் உயிர் வகைகளுக்குத் தன்வசம் என்பது இல்லை. கரும வசத்தால் அவைகள் கற்பாந்தரத்தில் மறையவும் கற்பாரம்பத்தில் தோன்றவும் செய்கின்றன. பல கற்பங்களுக்குப் பிறகும் அவரவர் கர்மமே அவரைத் தொடர்ந்து வருகிறது.

20. பரஸ்தஸ்மாத்து பாவோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந: 
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஸ்யத்ஸு ந விநஸ்யதி  

து தஸ்மாத் அவ்யக்தாத்-ஆனால் அந்த அவ்யக்தத்தை காட்டிலும், பர: அந்ய: நாதந:-மிகவும் உயர்ந்த வேறான சாஸ்வதமான, அவ்யக்த: பாவ: ய:-வெளிப்படாத தன்மையுடன் எது இருக்கிறதோ, ஸ: ஸர்வேஷு பூதேஷு நஸ்யத்ஸு-அது எல்லா உயிர்களும் அழிகையில், 
ந விநஸ்யதி-அழிவதில்லை.

பொருள் : அவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது

பிரம்மா உட்பட தோன்றியுள்ள அனைத்தும் தோன்றா நிலைக்கும் போகும்பொழுது அவ்யக்தம் என்று பெயர் பெறுகிறது. நீரானது ஆவியாகும் பொழுது கட்புலனாவதில்லை. அங்ஙனம் பிரம்மாவின் சிருஷ்டி மறையும்பொழுது புலன்களுக்குத் தென்படுவதில்லை; அவித்தையில் மறைந்து கிடக்கின்றது. மற்றொரு அவ்யக்தம் இதற்கு அன்னியமாக, பரமாக, ஸநாதனமாக இருக்கிறது. அது இந்திரியங்களுக்கு எப்பொழுதுமே எட்டுவதில்லை. வந்துள்ள உயிர்களுக்குப் போக்கு இருக்கிறது. அதீத அவ்யக் தமோ போக்கும் வரவும் இல்லாதது. என்றென்றைக்கும் அது தன்மயமாயிருக்கிறது.

அதன் சொரூபம் எத்தகையது என்று மேலும் ஆராயுமிடத்து:

21. அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம் 
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம  

அவ்யக்த: அக்ஷர: இதி உக்த:-அவ்யக்தம் அழிவற்றதெனப்படும், தம் பரமாம் கதிம் ஆஹு:-அதனையே பரமகதி யென்பர், யம் ப்ராப்ய ந நிவர்தந்தே-எதை எய்திய பின் மீள்வதில்லையோ, தத் மம பரமம் தாம-அது என்னுடைய பரம பதம் (உயர்ந்த வீடு).

பொருள் : அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

அவ்யக்தம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாதது. அக்ஷரம் என்றால் பழுதுபடாதது.

பரப்பிரம்மம் எப்பொழுதுமே இந்திரியங்களுக்கு எட்டாததாகவும் பழுதுபடாததாகவும் இருக்கிறது. தோன்றா நிலையிலுள்ள பிரகிருதியும் அவ்யக்தம் என்று சொல்லப்படுகிறது. பரப்பிரம்மமும் அவ்யக்தமென்று சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டுக்குமுள்ள பொருள் வேற்றுமையைக் கருத்தில் வைக்க வேண்டும். பிரகிருதி க்ஷரம் அல்லது அழியும் தன்மையது. பிரம்மமோ அக்ஷரம். பிரகிருதியில் ஒடுங்குபவைகள் திரும்பவும் தோன்றுகின்றன. பிரம்மத்தில் ஒடுங்குபவைகள் தோற்றத்துக்குத் திரும்பி வருவதில்லை. பிரம்மத்துக்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லையாதலால், அது பரமபதம் எனப்படுகிறது.
அதை அடையும் வழி:

22. புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா 
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்  

பார்த பூதாநி யஸ்ய அந்த: ஸ்தாநி-அர்ஜுனா எவனுள்ளே எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ, யேந இதம் ஸர்வம் ததம்-எவனால் இவை எல்லாம் நிறைந்திருக்கின்றதோ,
ஸ: பர: புருஷ: து-அந்த பரம புருஷன், அநந்யயா பக்த்யா-வேறிடஞ் செல்லாத பக்தியால், 
லப்ய-அடையப் படுவான்.

பொருள் : வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.

அனன்ய பக்தி என்பது வேறு ஒன்றையும் நினையாது அவனிடத்திலேயே செலுத்தும் பக்தி. இதை ஆத்ம சொரூபானு சந்தானம் என்பர். கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. ஆனால் அம்மலைகளுள் கடல் ஊடுருவிப் பாய்ந்து வியாபகமாயில்லை. ஸ்தூல வஸ்துவுக்கு வியாபகமும், தன்னகத்து அனைத்தையும் அடக்கும் வல்லமையும் இல்லை. ஆகாசத்தில் ஏனைய பூதங்களெல்லாம் அடங்கியிருக்கின்றன. மண், புனல், தீ, காற்று ஆகிய பூதங்களில் ஆகாசமானது நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறது. அங்ஙனமே சிதாகாசமாகிய பரம்பொருளில் சரம், அசரம் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. மேலும் அந்த சிதாகாசம் ஒன்றே எல்லாப் பொருள்களுக்கும் பிரிவற நிறைந்திருக்கின்றது.

கடவுள் எல்லாரிடத்திலும் இருக்கிறார். ஆனால் எல்லாரும் கடவுளிடத்து இல்லை.

23. யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகிந: 
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப  

பரதர்ஷப-பரதர் ஏறே! யத்ர காலே ப்ரயாதா யோகிந:-எக்காலத்தில் இறப்பதால் யோகிகள், 
அநாவ்ருத்திம் ச ஆவ்ருத்திம் ஏவ யாந்தி-மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, 
தம் காலம் வக்ஷ்யாமி-அக்காலத்தைச் சொல்லுகிறேன்.

பொருள் : யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.

24. அக்நிர்ஜ்யோதிரஹ: ஸுக்ல: ஷண்மாஸா உத்தராயணம் 
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா:  

அக்நி: ஜ்யோதி: அஹ:-தீ, ஒளி, பகல், ஸுக்ல: உத்தராயணம் ஷண்மாஸா-சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள், தத்ர ப்ரயாதா ப்ரஹ்மவித: ஜநா:- இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள், ப்ரஹ்ம: கச்சந்தி-பிரம்மத்தை அடைகிறார்கள்.

பொருள் : தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள்.

25. தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம் 
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே  

தூம: ராத்ரி: ததா க்ருஷ்ண:-புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயநம் ஷண்மாஸா -தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும், தத்ர யோகீ சாந்த்ரமஸம் ஜ்யோதி ப்ராப்ய-அந்த யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து, நிவர்ததே-மீளுகிறான்.

பொருள் : புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.

26. ஸுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஸாஸ்வதே மதே 
ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந:  

ஹி ஜகத: ஏதே ஸுக்ல க்ருஷ்ணே கதீ-ஏனெனில் உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும், ஸாஸ்வதே மதே-சாசுவதமாகக் கருதப்பட்டன, ஏகயா அநாவ்ருத்திம் யாதி- இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான், அந்யயா: புந: வர்ததே-மற்றொன்று மீளும் பதந் தருவது.

பொருள் : உலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது.

24,25,26 இம்மூன்று சுலோகங்களின் உட்கருத்து சிந்தனைக்குரியது. மரணத்தின் வாயிலாக மறுபிறப்புக்குப் போம் ஜீவர்கள் தேவயானம், பித்ருயானம் என்னும் இரண்டு மார்க்கங்களில் செல்லுகின்றனர். அவைகளை முறையே ஜோதிர் மார்க்மென்றும் தூம மார்க்கமென்றும் பகர்வதுண்டு. முந்தையது ஒளி நிறைந்தது; பிந்தியது இருள் சூழ்ந்தது. ஒன்று படிப்படியாக ஜீவனை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவல்லது. மற்றது மனிதனை நெடுங்காலம் இடைநிலையிலும் கடைநிலையிலும் வைத்துவிடுகிறது. இனி, இவ்விரண்டு மார்க்கங்களுக்கு இந்தச் சுலோகங்களில் வந்துள்ள பதங்களுக்கு வாச்சியார்த்தம் எடுத்துக்கொண்டால் குறைபாடுகள் பல தென்படும். எப்படியென்று ஆராய்ந்து பார்ப்போம். அக்னி, ஜோதி நிறைந்த சூழ்நிலையில் மரணமடைபவன் மேன்மையடைகிறான். புகையில் மூடுபட்டு மறைபவன் கீழ்மையடைகிறான். ஒருவன் உயிர் துறக்கும்போது வீட்டில் கொழுந்துவிட்டு எரியும் அக்னியும் மின் விளக்கு ஜோதியும் நிறைந்திருக்கும்படி சுலபத்தில் செய்துவிடலாம். ஆனால் அதை முன்னிட்டு மறுபிறப்பில் மேன்மை வந்தமைகிறது என்பது யுக்திக்கும் அனுபவத்துக்கும் சிறிதும் பொருந்தாது. அடுத்தபடியாகப் பகலில் சாகின்றவனுக்கு ஜோதிர் மார்க்கமென்றும் இரவில் சாகின்றவனுக்கு தூம மார்க்கமென்றும் சொல்லப்படுகிறது. இன்றைக்கு ஆகாய விமானத்தின் துணைகொண்டு என்றென்றும் சூரியன்தென்படுகிற இடங்களில் சென்று வசிக்கலாம். பின்பு, அதை முன்னிட்டு மேலாம் பிறவி வருகிறது என்பது பொருந்தாது. வளர்பிறையில் வரும் சுக்ல பக்ஷம் மேன்மைக்குரியது; தேய்பிறையில் வரும் கிருஷ்ணபக்ஷம் கீழ்மைக்குரியது. இந்த ஒரு சூழ்நிலையை வெல்ல நவீனத்தில் அமைந்துள்ள உபாயம் எதுவும் உதவாது. இனி, உத்தராயணம் சூரிய வெளிச்சம் நிறைந்தது; தக்ஷிணாயனம் இருள் நிறைந்தது. ஆனால் ஆகாய விமானத்தின் துணைகொண்டு மனிதன் தக்ஷிணாயன காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் போய்விடுவானானால், அதே தக்ஷிணாயனம் அவனுக்குப் புண்ணிய காலம் ஆய்விடும். ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொழுது ஆங்கு அதிகமாக இருக்கிறது. ஆக மனிதன் அடையும் மேன்மையும் கீழ்மையும் மரணத்தின்போது அவனுக்கு அமையும் காலத்தையும், இடத்தையும், சூழ்நிலையையும் முன்னிட்டு அல்ல என்பது வெளியாகிறது.

வெளிச்சத்துக்கு அறிகுறியாகும் காலம், இடம்; இருளுக்கு அறிகுறியாகும் காலம், இடம் ஆக இருவகையாக அவை பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டும் ஆத்ம தத்துவத்துக்கு ரூபகமாக அமைந்தவையாகும். படிப்படியாக மேல் நிலைக்குப் போகும் ஜீவன் ஆத்மப் பிரகாசம் அடைகிறது. முன்னேற்றமடையாது இருந்தபடி இருக்கும் ஜீவனும் படிப்படியாகக் கீழ் நிலைக்குப் போகும் ஜீவனும் அக்ஞான இருளில் மறைபவையாகின்றன. வாழ்நாளில் ஒரு ஜீவன் அடைந்துள்ள மேன்மையை அல்லது கீழ்மையை அவனது மரணம் விளக்கும். அணையும் போது தீபம் அதிகம் சுடர் விடுவதுண்டு. நல்லார் அங்ஙனம் உடல் நீங்கும்போது பிரக்ஞை தெளிவடைவதுண்டு. பிரக்ஞையின் தெளிவுக்கு ஏற்றவாறு அதை அக்னி, ஜோதி, பகல், சுக்ல பக்ஷம், உத்தராயணம் என்று யோகிகள் இயற்கையோடு ஒப்பிட்டு வகைப்படுத்தினார்கள். அதேபாங்கில் பிரக்ஞையின் மறைவுக்கு ஏற்றபடி புகை, இரவு, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனம் என்று அவர்கள் வகைப்படுத்தினார்கள். பல ஜன்மாந்தரங்களில் மேலும் மேலும் ஆத்மஞானப் பிரகாசம் அடைபவர் மேலோர், மற்றவர்கள் கீழோர் என்பது இதன் கோட்பாடாகும்.

27. நைதே ஸ்ருதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஸ்சந 
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந  

பார்த! ஏதே ஸ்ருதீ ஜாநந்-பார்த்தா! இவ் வழிகளிரண்டையும் உணர்ந்த, கஸ்சந யோகீ முஹ்யதி-எந்த யோகியும் மயக்கமுறுவதில்லை, தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு-ஆதலால் எப்போதும் யோகத்தில், யோக யுக்த: பவ-யோகத்தில் கலந்திரு.

பொருள் : இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு.

குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் யோக சாதனம் பயிலுதல் என்பதன்றி, எத்தொழிலைச் செய்தாலும், யாதவஸ்தைப்பட்டாலும் அவைகளுக்கெல்லாம் இடையில் யோகபரனாய். ஸகஜ நிஷ்டையில் இருப்பவன் மேலே சொல்லிய இரண்டு வழிகளில் சுக்ல கதி அல்லது ஜோதிர் மார்க்கத்தில் செல்பவனாகின்றான்.

கப்பல் எத்திசையில் போய்க்கொண்டிருந்தாலும் அதில் உள்ள திசைகாட்டி முள் வடதுருவத்தையே நோக்கி நிற்கிறது. அங்ஙனம் மனிதன் எதைச் செய்துகொண்டிருந்தாலும் அவனது மனது யாண்டும் சர்வேசுவரனிடத்தே நிலைத்திருக்கட்டும்.

28. வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ 
தாநேஷு யத் புண்யபலம் ப்ரதிஷ்டம் 
அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா 
யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்  

யோகீ இதம் விதித்வா-யோகி இதனை யறிவதால், வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு தாநேஷு ச-வேதங்களிலும், யாகங்களிலும், தவங்களிலும், தானங்களிலும், யத் புண்யபலம் ப்ரதிஷ்டம்-எந்த புண்ணியத்தின் பயன் சொல்லப் பட்டிருக்கிறதோ, தத் ஸர்வம் அத்யேதி-அவை அனைத்தையும் கடந்து செல்கிறான், ச ஆத்யம் பரம் ஸ்தாநம் உபைதி-மேலும் ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.

பொருள் : இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அர்ஜுனன் கேட்ட ஏழு கேள்விகளுக்கும் விடைகளாக வந்த இதை அறிபவன் அக்ஷர பிரம்மத்தை அறிபவன் ஆகிறான். முறையாக வேதங்களை ஓதி, யாகங்களைச் செய்து, தவம் புரிந்து தானத்தை வழங்குவதினின்று விளையும் புண்ணிய கர்மபலனாகிய சுவர்க்காதி பதவிகளைப் பெறுவதைவிட மேலானதாகிற பிரம்ம சாக்ஷõத்காரம் அந்த யோகிக்கு ஏற்படுகிறது.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
அக்ஷரப்ரஹ்மயோகோ நாம 
அஷ்டமோ அத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் அக்ஷரப்ரஹ்ம யோகம் என்ற எட்டாம் அத்தியாயம்.





தொடரும்... 


நன்றிவணக்கம் 
ஹரிமணிகண்டன்
 Harimanikandan .V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

No comments:

Post a Comment