Saturday, November 3, 2012

Tamil Bhagavad Gita Chapter - 05



Tamil Bhagavad Gita Chapter - 05


ஸ்ரீ மத் பகவத்கீதை ஐந்தாம் அத்தியாயம் 

Tamil Srimad Bhagavad Gita Chapter - 5 





ஸந்யாஸ யோகம்


அர்ஜுந உவாச 
1.ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்

அர்ஜுந உவாச க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான், கண்ணா ! கர்மணாம்-செய்கைகளின்
ஸந்ந்யாஸம் புந: யோகம் ச ஸம்ஸஸி-துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய், ஏதயோ: யத் ஏகம்-இவ்விரண்டில் எதுவொன்று, ஸ்ரேய: ஸுநிஸ்சிதம்-சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி, தத் மே ப்ரூஹி-என்னிடம் சொல்!

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.

நான்காவது அத்தியாயம் 18,19,21,22,24,32,33,37,41 சுலோகங்களில் கர்ம ஸந்யாஸத்தைப் பகவான் வற்புறுத்தினார். பிறகு அதே அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் கர்ம யோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றார். முரண்படுகிற இவ்விரண்டையும் ஏககாலத்தில் மனிதன் கையாள முடியாது. ஆக, அர்ஜுனன் உள்ளத்தில் இந்த ஐயம் எழுந்தது.

ஸ்ரீபகவாநுவாச

2. ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகராவுபௌ
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஸந்ந்யாஸ: கர்மயோக உபௌ ச-துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும், நி:ஸ்ரேயஸகரௌ-உயர்ந்த நலத்தைத் தருவன, து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக-இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம், விஸிஷ்யதே-மேம்பட்டது.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.

சிரேயஸ் அல்லது சிறப்பு என்பது முக்தி. ஜீவன் அடைபவைகளுள் தலைசிறந்ததாகிய முக்தியானது கர்ம ஸந்யாஸத்தால் அடையப்படும். அதே முக்தி கர்மயோகத்தாலும் அடையப்படும். ஹிமாசலத்தில் பத்ரிகாச்ரமத்துக்கு ஆகாய விமானத்திலும் செல்லலாம், நடந்தும் போகலாம். இரண்டு முறைகளிலும் அந்த ÷க்ஷத்திரம் அடையப்பெறுகிறது. ஆனால் நடந்து செல்பவருக்கு உண்டாகும் உடல் பயிற்சியும், மக்கள் இணக்கமும், இதர இயற்கை ஞானமும் விமானத்தில் பறந்து செல்பவருக்கு உண்டாகாது. நடந்து செல்லுதற்கு ஒப்பானது கர்மயோகம். பல விதங்களில் அது ஜீவனைப் பண்படுத்துகிறது. தேகம் எடுத்தவர் கர்மயோகம் செய்வதே சிறந்தது. ஸந்யா ஸமோ சாந்தியையும் ஞானத்தையும் தருகிறது. கர்மயோகம் சாந்தியையும் ஞானத்தையும் எப்படித் தரும் என்று எண்ணலாம். அதற்கு விளக்கம் வருகிறது.

3. ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே

மஹாபாஹோ!-பெருந்தோளாய்! ய: ந த்வேஷ்டி-எவன் வெறுப்பு இல்லாமலும், ந காங்க்ஷதி-விரும்புதலும் இல்லாமலும், ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய:-அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன், ஹி நிர்த்வந்த்வ:-இருமை நீங்கி, ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே-எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

பொருள் : பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மமல்ல. கஷ்டப்பட்டு வேலை செய்வதை ஒருவன் வெறுப்பானாகில், அல்லது வேலை செய்யாது சோம்பித்திரிவதை ஒருவன் விரும்புவானாகில் அவன் இன்பதுன்பம் முதலிய இருமைகளில் கட்டுண்டவனாகிறான். எத்தனையோ அலுவல்களை ஆற்றுதற்கிடையில் யோகி ஒருவன் விருப்பு வெறுப்பற்றிருப்பானாகில் அவன் சித்தத்தில் ஒரு விருத்தியும் உண்டாவதில்லை. மனதை எதுவும் தளைப்பதில்லை. ஆகையால் கர்மம் செய்தும் செய்யாதவனாகிறான். அந்த அளவில் அவன் நித்தியஸந்யாஸியே. ஸந்யாஸ ஆச்ரமம் எடுத்துக்கொண்டதன் வெளியறிகுறிகள் அவனிடத்து இருக்கவேண்டும் என்பதில்லை. மனமே பந்தம் அல்லது மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது.

4. ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்

ஸாங்க்யயோகௌ-(மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும், ப்ருதக்-வெவ்வேறென்று, பாலா: ப்ரவதந்தி பண்டிதா: ந-அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார், ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தித:-யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன், உபயோ: பலம் விந்ததே-இரண்டின் பயனையும் எய்துகிறான்.

பொருள் : சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

கர்ம ஸந்யாஸம் ஈண்டு சாங்க்யம் எனப்படுகிறது. சாஸ்திரத்தின் உட்கருத்தை அறியாத அவிவேகிகள் பாலர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒன்றை அனுஷ்டிப்பது இரண்டின் பலனைப் பெறுவது எங்ஙனம் என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :

5. யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஸ்யதி ஸ பஸ்யதி

ஸாங்க்யை: யத் ஸ்தாநம் ப்ராப்யதே-சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ, தத் யோகை: அபி கம்யதே-அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள், ய: ஸாங்க்யம் யோகம் ச ஏகம் பஸ்யதி-எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ, 
ஸ ச பஸ்யதி-அவனே காட்சியுடையோன்.

பொருள் : சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.

அறிவைக் கையாண்டு இயற்கையின் இயல்பு எத்தகையது என்று எண்ணிப் பார்ப்பது சாங்க்யம். ஞானமார்க்கம் என்பதும் இதுவே. அப்படி விசாரித்துப் பார்க்குமிடத்துப் பிரகிருதியில் பற்று வைப்பதே துன்பமனைத்துக்கும் முதற்காரணம் என்பது விளங்கும். பிரகிருதியினின்று விலகியிருத்தலே முக்தியாகிறது. இனி, யோகம் என்பது கர்மத்தின் மூலம் பிரகிருதியோடு தொடர்வு வைத்தலாகும். பற்றில்லாது கர்மம் செய்பவனுக்குப் பிரகிருதியானது தாய்போன்று துணைபுரிகிறது; ஆற்றலும் அறிவும் ஆனந்தமும் பெருகும்படி செய்கிறது. பிரகிருதியில் கட்டுப்படாதிருப்பதே அதன்கண் புனிதம் காண்பதற்கு உற்ற உபாயம். அதில் கட்டுப்படாமையினால் முக்தியின் மேன்மையெல்லாம் யோகிக்கு வந்தமைகிறது. இங்ஙனம் சாங்க்யமும் யோகமும் ஒன்றாகின்றன. இரண்டும் ஒன்று என்று அறிந்தவன் உண்மையை அறிந்தவனகிறான்.

இவ்விரண்டு மார்க்கங்களுள் பொதுவாக எல்லா சாதகர்களுக்கும் நன்கு பயன்படுவது எது? அடுத்த சுலோகம் விளக்குகிறது :

6. ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி

து மஹாபாஹோ-ஆனால் பெருந் தோளாய், அயோகத: ஸந்ந்யாஸ: ஆப்தும் து:கம்-யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம், யோக யுக்த: முநி: ப்ரஹ்ம-யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை, நசிரேண அதிகச்சதி-விரைவில் அடைகிறான்.

பொருள் : பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

காய் ஒன்று மரத்தில் முறையாக ஒட்டியிருந்தால் மரத்திலிருந்து பெறவேண்டிய சாரத்தையும் வலிவையும் பெற்றுப் பின் தானே மரத்தைவிட்டுப் பிரிந்து பழமாக விழுகிறது. யோகி ஒருவன் முறையாகக் கர்மயோகம் செய்வதால் பிரகிருதியினின்று பெறவேண்டிய அனுபவங்களைப் பெற்று, அந்த ஞான முதிர்ச்சியால் பிரம்ம நிஷ்டனாகிறான். இதுவே முறையான கர்ம ஸந்யாஸமாகிறது. ஆக, எல்லாரும் கர்மயோகத்தைக் கையாளுதல் வேண்டும்.

கர்மயோகம் சாதகனை எப்படிப் பண்படுத்துகிறது? பகவான் பகர்கிறார்.

7. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே

விஜிதாத்மா-தன்னைத் தான் வென்றோன், ஜிதேந்த்ரிய:-இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், விஸுத்தாத்மா-தூய்மையுற்றோன், ஸர்வ பூதாத்ம பூதாத்மா-எல்லா உயிர்களுந் தானே யானவன், யோகயுக்த: குர்வந் அபி-அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும், ந லிப்யதே-அதில் ஒட்டுவதில்லை.

பொருள் : யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.

ஜீவர்களெல்லாம் கர்மத்தில் ஈடுபடுகின்றவளவு அதில் கட்டுண்டு கீழ்மையடைகின்றனர். ஆனால் கர்மயோகி கர்மம் செய்கின்றவளவு அதினின்று விடுதலையடைகின்றான். நிஷ்காமியமாகக் கர்மம் செய்யப்படுவதால் நிராசை மனத்தெளிவை உண்டு பண்ணுகிறது. ஆசை அகலுகின்றவளவு உடலும் இந்திரியங்களும் வசப்படுகின்றன. நிராசை நாளடைவில் ஞானமாக வடிவெடுக்கிறது. எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாயிருப்பவர் பரமாத்மா ஒருவரே என்ற அனுபவம் அத்தகைய ஞானத்தின் பயனாம். இங்ஙனம் கர்ம பந்தத்தை நீக்குவதால் கர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகப் பரிணமிக்கிறது.

ஒருவனுக்கு எவ்வளவு காலம் திவ்விய சக்ஷúஸ் உண்டாக வில்லையோ, எவ்வளவு காலம் பொற்குளிகையால் பித்தளை பொன்னாக மாறவில்லையோ அவ்வளவு காலம் வரையில் நான்தான் கர்த்தா என்ற மதிமயக்கம் இருக்கும்; அதுவரையில் இந்த நற்காரியத்தை நான் செய்தேன். அந்தக் கெட்ட காரியத்தை நான் செய்தேன் என்ற வித்தியாச மனோபாவம் இருந்து தீரும். இந்த வேறுபாடுற்ற மனோபாவந்தான் சம்ஸாரம் நீடித்திருப்பதற்குக் காரணமாகிய மாயை. நல்வழியில் செலுத்துவதும், ஸத்வகுணம் மேலோங்கி நிற்பதுமாகிய வித்யாமாயையில் சரணம் புகுந்தாலோ ஒருவன் ஈசுவரனை அடைவான். ஈசுவரனே நேரில் கண்டு அவனுடைய ஸ்வரூபத்தை அறிபவன்தான் உண்மையான முக்தன்; அவன் மாயையாகிய ஸமுத்திரத்தைத் தாண்டுபவன். ஈசுவரனே கர்த்தா, தான் கர்த்தா அல்லன் என்று உணர்பவன் சரீரத்தோடிருப்பவனும் அவன் முக்தனே.

கர்மபந்தத்தினின்று விடுபட்டதன் அறிகுறிகளாவன:

8. நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பஸ்யஞ்ச்ருண்வந்ஸ்ப்ருஸஞ்ஜிக்ரந்நஸ்நங்கச்சந்ஸ்வபந்ஸ்வஸந்

9. ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்

பஸ்யந்-காண்கினும், ச்ருண்வந்-கேட்கினும், ஸ்ப்ருஸந்-தீண்டினும், ஜிக்ரந்-மோப்பினும், அஸ்நந்-உண்பினும், கச்சந்-நடப்பினும் ஸ்வபந்-, உறங்கினும், ஸ்வஸந்-உயிர்ப்பினும்
தத்த்வவித் யுக்த:-உண்மை அறிந்த யோகி, கிஞ்சித் ஏவ ந கரோமி-நான் எதனையும் செய்வதில்லை, இதி மந்யேத-என்று நினைக்க வேண்டும்.

ப்ரலபந்-புலம்பினும், விஸ்ருஜந்-விடினும், க்ருஹ்ணந்-வாங்கினும், உந்மிஷந்-இமைகளைத் திறப்பினும், நிமிஷந் அபி-மூடினும் இந்த்ரியாணி, இந்த்ரியார்தேஷு-இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில், வர்தந்தே இதி தாரயந்-செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு, (நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்).

பொருள் : உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,

பொருள் : புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.

வாழ்க்கை சம்பந்தமான செயல்கள் யாவும் சரீரத்தில் நடை பெறுகின்றன. ஆத்மாவுக்கோ செயலில்லை என்ற உண்மையைத் தெரிந்து அதில் நிலைத்திருப்பவனுக்கு நான் கர்த்தா என்ற எண்ணமில்லை. வண்டியில் ஊர்ந்து செல்பவன் தன் செயலாய் அகங்கரிக்கும்பொழுது நான் போகிறேன் என்கிறான். தூக்கத்தில் பேசிய பேச்சுக்கு ஒருவன் கர்த்தாவல்லன். ஏதோ ஒன்றை ஆழ்ந்து எண்ணிக்கொண்டு ஆகாரம் புசித்தவனுக்கு என்ன பதார்த்தங்களை உண்டான் என்பது தெரியாது. அங்ஙனம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனுக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், பிராணன் ஆகியவைகளின் செயல்கள் தன்னுடையவைகளாகத் தென்படா.

தான் வெறும் கருவி; ஈசனே கர்த்தா என்று அனுபூதியில் அறிந்து கொண்டவனது வாழ்க்கை எப்படிப்பட்டது?

சுவர்ண குளிகையின் ஸ்பரிசத்தால் முற்றும் பொன்னாக மாறிய கத்தியானது பழைய வடிவத்தில் இருக்கிறது. ஆனால் அது வெட்டுதற்கு உதவாது. அங்ஙனம் எல்லாம் ஈசன் செயல் என்ற அனுபூதியடைந்தவன் பழையபடி கிருத்தியங்களைச் செய்கிறான். ஆயினும் அவனிடம் அகங்காரத்தின் விஷம் சிறிதளவுமில்லை. அவன் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.

கர்மத்துக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது? விடை வருகிறது. (8-9)

10. ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா

ய: கர்மாணி ப்ரஹ்மணி ஆதாய-எவன் செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு,
ஸங்கம் த்யக்த்வா, கரோதி-பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அம்பஸா பத்ம பத்ரம் இவ-நீரில் தாமரையிலை போல், ஸ: பாபேந ந லிப்யதே-அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

பொருள் : செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

தாமரையானது தண்ணீரிலே தோன்றி தண்ணீரிலே வளர்ந்து தண்ணீரிலே நிலைபெற்றிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது தானே பட்டுப்போம். தண்ணீரில் தொடர்ந்திருப்பினும் தாமரையில் அதில் நனைவதில்லை. அங்ஙனம் மனிதன் கர்மத்திலே பிறந்து, கர்மத்திலே வளர்ந்து, கர்மத்திலே நிலை பெற்றிருக்கிறான். எனினும் தன் பேரியல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்திருக்கும் யோகி கர்மத்தில் கட்டுப்படுவதில்லை.

யோகிக்குக் கர்மம் எப்படிப் பயன்படுகிறது?

11. காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்தயே

யோகிந: ஸங்கம் த்யக்த்வா-யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்மஸுத்தயே-ஆத்ம சுத்தியின் பொருட்டாக, காயேந மநஸா புத்த்யா-உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
கேவலை: இந்த்ரியை: அபி-வெறுமே இந்திரியங்களாலும், கர்ம குர்வந்தி-தொழில் செய்வார்.

பொருள் : யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.

அகங்காரமும் சுயநலமும் யோகியினுடைய உள்ளத்திலிருந்து அடிபட்டுப்போய்விடுகின்றன. அப்பொழுது அகக்கரணங்களும் புறக்கரணங்களும் வெறுமனே வேலை செய்கின்றன. உள்ளிருந்து ஆசை என்னும் வேகம் ஒன்றும் அவைகளுக்கு வருவதில்லை. நீராவி, பெட்ரோல் எண்ணெய், மின்சக்தி முதலியன யந்திரங்களுக்கு விசையாகின்றன. விசையை அடைத்த பின்பும் யந்திரம் சிறிது ஓடுவது போன்று கரணங்கள் ஆசை என்ற விசையில்லாது வேலை செய்கின்றன. அதனால் சித்தம் தெளிவடைகிறது. கர்மத்தினின்று யோகி அடையப்பெறும் நன்மை இதுவே. மேலும் :

12. யுக்த: கர்மபலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

யுக்த: கர்மபலம் த்யக்த்வா-யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து, நைஷ்டிகீம் ஸாந்திமாப்நோதி-நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான், அயுக்த: காமகாரேண-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப், பலே ஸக்த:-பயனிலே பற்றுதல் கொண்டு, நிபத்யதே-தளைப்படுகிறான்.

பொருள் : யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.

வினையாற்றுதல் யோகிக்கும் யோகியல்லாதவனுக்கும் பொதுவானது. தன்மூலம் நடைபெறுகிற செயலெல்லாம் ஈசன் செயல் என்ற நினைவே யோகிக்கு நிஷ்டையாகிறது. அதில் அவன் உறுதிப்பாடு அடையுமளவு கவலையில்லை; சாந்தி நிலவுகிறது. சித்த சுத்தி வலுக்கிறது; ஞானம் உதயமாகிறது. யோகி யல்லாதவன் ஆசையின் வசப்பட்டுத் தன் செயலைத் தனக்காக வென்று புரிகிறான். அது அவனைத் தளைக்கின்ற வல்வினையாக வடிவெடுத்து வேதனைப்படுத்துகிறது.

ஈசுவரக் கிருத்தியம் தன்மூலம் நடைபெறுகிறது என்ற நிஷ்டையில் நிலைத்திருப்பவனது பான்மை எத்தகையது? விடை வருகிறது :

13. ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்

வஸீ தேஹீ-தன்னை வசங்கொண்ட ஆத்மா, ந குர்வந் ந காரயந் ஏவ-எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, நவத்வாரே புரே-ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில், ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய-எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து,
ஸுகம் ஆஸ்தே-இன்புற்றிருக்கிறான்.

பொருள் : தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.

மனப்பான்மைக்கு ஏற்றபடி கர்மங்கள் வெவ்வேறு வடிவெடுக்கின்றன. அவைகளுள் முக்கியமானது நித்திய கர்மம். எதைச் செய்தால் புண்ணியமில்லையோ, ஆனால் செய்யாவிட்டால் பாபமேற்படுமோ, அது நித்திய கர்மம். உண்பது, உறங்குவது, நீராடுவது, வழிபடுவது முதலியன நித்திய கர்மங்களாம். நைமித்திக கர்மம் என்பது சிவராத்திரி, ஏகாதசி, கிரகண வேளை போன்ற விசேஷகாலங்களில் செய்யப்படும் கர்மங்களாம். மூன்றாவதாக வருவது காமிய கர்மம். குறித்த பலனுக்காக அது செய்யப்படுவதாகும். ஆனால் அதைச் செய்யாது விட்டுவிடுவதால் கேடு ஒன்றுமில்லை. செய்யத்தகாதது என்று அடியோடு விலக்கப்பட்ட கர்மம் எதுவோ அது நிஷித்த கர்மம். யோகிக்கு ஆசையும் அகங்காரமும் இல்லாததினால் இந்த நான்குவித கர்மங்களில் எக்கர்மமும் அவனை வந்து சார்வதில்லை. அதாவது அவன் தன்னைக் கர்த்தாவென்று நினைப்பதில்லை.

ஒன்பது வாசல்களையுடைய உடல் ஓர் ஊராகக் கருதப்படுகிறது. அரசன் போன்று ஆத்மா அதில் கர்மம் ஒன்றும் செய்யாது சும்மாயிருக்கிறது. அதனுடைய மந்திரிபிரதானிகளாகிய அகங்காரம், மனம், புத்தி, பிராணன், இந்திரியங்கள் முதலியன தொழில் புரிகின்றன. பிராரப்த கர்மம் முடிவடையும் வரையில் இங்ஙனம் செயல்கள் நடைபெறுகின்றன. செயலுக்கு நான் கர்த்தா என்ற எண்ணம் யோகியினிடத்து இல்லை.

எல்லாம் ஈசன் செயல் என்று உறுதிகொண்டு யோகி கர்த்ருத்வத்தை ஒழிக்கிறான். அப்படியானால் சர்வேசுவரனே தொழில் புரிகின்றாரா? விடை வருகிறது.

கர்மம் பிரகிருதிக்கு உரியது : ஆத்மாவுக்கு அல்ல.

14. ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே

கர்த்ருத்வம்-செயலின் கர்த்தா என்னும் தன்மை, கர்மாணி-கர்மங்கள், கர்ம பல ஸம்யோகம்-செய்கைப் பயன் பெறுதல், ப்ரபு: லோகஸ்ய ந ஸ்ருஜதி-(இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை, து ஸ்வபாவ: ப்ரவர்ததே-ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.

பொருள் : செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.

கர்த்ருத்வம் என்பது வினைத்தலைமை அல்லது செயலுக்கெல்லாம் தானே தலைவன் என்ற உணர்ச்சியாம். ஸ்வபாவம் என்பது இயற்கை அல்லது பிரகிருதியின் மற்றொரு பெயர். பிரகிருதியின் செயல் ஆத்மாவின் செயல்போன்று தென்படுவது அக்ஞானத்தால். ஆகையால் அக்ஞானத்தில் இருக்கும் ஜீவாத்மா தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிறான். கர்மத்தைத் தன்னுடையது என்று எண்ணுகிறவனுக்குக் கர்ம பலனைச் சார்தலும் உண்டாகிறது. இவையாவும் உண்மையில் பிரகிருதியின் செயல்களே யொழிய ஆத்மாவின் செயல்களல்ல. அது மேலும் விளக்கப்பெறுகிறது.

15. நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:

பாபம் ஸுக்ருதம் ச-பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று, கஸ்யசித் ந ஆதத்தே-எவனையும் கடவுள் ஏற்பதில்லை, அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம்-அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது, தேந ஜந்தவ: முஹ்யந்தி-அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

எங்கும் நிறைந்துள்ள ஆகாசத்தின்மீது ஏனைய நான்கு பூதங்களும் நிலைபெற்றிருக்கின்றன. மண்ணில், நீரில், காற்றில் காணும் கேடுகளெல்லாம் ஆகாசத்தைக் கெடுப்பதில்லை. அவைகளில் உள்ள நன்மைகள் ஆகாசத்தை அலங்கரிப்பதில்லை. அங்ஙனம் பிரகிருதியின்கண் உள்ள நன்மை தீமைகளைப் பரமாத்மா ஏற்றுக்கொள்ளுதலுமில்லை, பொருட்படுத்துதலுமில்லை. ஸ்படிகத்துக்குப் பக்கத்திலுள்ள புஷ்பத்தின் நிறத்தை, ஸ்படிகம் ஏற்பது போன்று தென்படுகிறது. உண்மையில் நிறம் ஒன்றையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. அங்ஙனம் ஆத்மாவானது பிரகிருதியின் இயல்பை ஏற்றுக்கொண்டது போன்று காட்சி கொடுக்கிறது. அத்தகைய அக்ஞானத்தினால் ஜீவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.

ஈசுவரனுக்கும் ஜகத்துக்கும் உள்ள தொடர்வு இந்த இரண்டு சுலோகங்களில் நன்கு விளக்கப்படுகிறது. சர்வேசுவரன் ஆனந்த சொரூபி; பரிபூரணன். காரண காரியத்தில் அவன் சம்பந்தப்பட்டவன் என்பது அவனது சொரூபத்துக்குச் சிறிதேனும் பொருந்தாது. அவனுடைய சன்னிதான விசேஷத்தால் பிரகிருதிக்கு சர்வ சக்தியும் வந்தமைகிறது. பிரகிருதியோடு தன்னை இணைத்துக்கொள்கையில் ஜீவன் பந்தத்துக்கு ஆளாகிறான். பிரகிருதியினின்று தன்னை விலக்கிக்கொள்கையில் அவன் விடுதலையடைகிறான். வேதாந்த சாரம் முழுதும் இக்கோட்பாட்டில் அடங்கியிருக்கிறது.

வெளிச்சத்தைத் தருவது தீபத்தின் சுபாவம். அதன் உதவியால் சிலர் சமையல் செய்கின்றனர். சிலர் பொய்ப்பத்திரம் தயார்ப்படுத்துகின்றனர்; வேறு சிலர் பாகவத படனம் பண்ணுகின்றனர். அதுபோல ஈசுவரனுடைய நாமத்தின் உதவியால் சிலர் மோக்ஷமடையப் பார்க்கின்றனர். வேறு சிலர் தங்கள் தீய எண்ணங்களைச் சாதித்துக்கொள்ள முயலுகின்றனர். என்றாலும் பகவந்நாமம் ஒருபோதும் அசுத்தமடையாமல் எப்போதும் தூயதாகவே இருக்கிறது.

சர்வேசுவரன் ஜீவர்களுடைய பாப புண்ணியங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை யென்றால் ஜீவர்கள் பாபத்தை நீக்கிப் புண்ணியத்தைச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்துதல் எதற்காக? விடை வருகிறது :

16. ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந:
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்

து ஏஷாம் தத் அஜ்ஞாநம்-ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம், ஆத்மந: ஜ்ஞாநேந நாஸிதம்-ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ, தேஷாம் ஜ்ஞாநம் ஆதித்யவத் -அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய், தத்பரம் ப்ரகாஸயதி-பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

பொருள் : அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

சூரியன் உதிக்கும்பொழுது இருள் தானே மறைந்து போகிறது. ஞானம் உதிக்கும்போது அக்ஞானமும் அப்படியே அழிந்துபோகிறது. சூரியன் பிரபஞ்சப் பொருள்களை உள்ள படி காட்டுவது போன்று ஆத்ம ஞானம் பரப்பிரம்மத்தை நேராக விளக்குகிறது. ஆத்ம ஞானமும் பிரம்ம ஞானமும் ஒன்றே.

பரப்பிரம்மத்தை சாக்ஷõத்கரிக்க ஆரம்பித்த சாதகர்கள் அதைச் சாரும் விதம் சாற்றப்படுகிறது.

17. தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:

தத்புத்தய: ததாத்மாந: தந்நிஷ்டா: தத்பராயணா:-பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:-ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், அபுநராவ்ருத்திம் கச்சந்தி-மீளாப் பதமடைகிறார்கள்.

பொருள் : பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.

சூரியன் எங்குச்சென்று தேடினாலும் இருளைக் காணாது; ஒளியையே காணும். அங்ஙனம் பிரம்ம ஞானத்தை அடைபவன் உள்ளும் புறமும் எங்கும் பிரம்ம சொரூபத்தையே காண்கின்றான். அவன் பெற்றுள்ளது பிரம்ம சாக்ஷõத்காரம் ஆகையால் அவன் பிரம்மஞானியாகத் திகழ்கிறான். மேலும் அவன் தானே பிரம்ம சொரூபம் ஆகின்றான். திரும்பவும் பிறப்பெடுப்பதென்பது அவனுக்கில்லை. அவன் முக்தியடைகிறான்.

யுக்தியினால் பெறப்படும் ஞானம் ஒருவகையானது என்பதையும், தியானத்தினால் வரும் ஞானம் முற்றிலும் வேறானதென்பதையும், ஈசுவர தரிசனத்தால் அதைவிட முற்றிலும் மேலான ஞானம் உதயமாகிறதென்பதையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்.

முக்தியடைந்ததன் அறிகுறியை இவ்வுலகில் உடலோடு கூடியிருக்கும்போதே தெரிந்துகொள்ளுதல் எப்படி?

18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட, ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும், 
பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

பொருள் : கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவேபடுகிறது. இது கங்கை, இது சாக்கடை யென்று சூரியன் பேதம் பாராட்டுவதில்லை. அங்ஙனம் பிரம்ம ஞானி பிரம்மத்தையே யாண்டும் காண்கிறான். வெறும் புஸ்தகங்கள் பல படித்தவன் பண்டிதன் அல்லன்; பிரம்ம சாக்ஷõத்காரம் பண்ணினவனே பண்டிதன். உலகத்தவர் காட்சியில் கல்வியடக்கமுடைய பிராம்மணன் மக்களுள் சிறந்தவன்; நாயை யுண்பவன் கடைப்பட்டவன். மிருகங்களுள் பரிசுத்தமானது பசு; அதிசயிக்கத்தக்கது யானை; அருகில் வரத் தகுதியற்றது நாய். அக்ஞானிக்கு வேற்றுமையை உண்டுபண்ணும் இந்த உயிர்வகைகளை யெல்லாம் ஞானி பிரம்ம சொரூபமாகவே காண்கிறான். ஆக, அவனுக்கு வேற்றுமையில்லை.

பேத புத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கிய புத்தியைத் தருவது ஞானம்.

இவ்வுலகில் இருப்பவர் இத்தகைய சமநிலையை அடைய முடியுமா? விடை வருகிறது:

19. இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:

ஏஷாம் மந: ஸாம்யே ஸ்திதம்-எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ, தை: இஹ ஏவ ஸர்க: ஜித:-இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்,
ஹி ப்ரஹ்ம நிர்தோஷம் ஸமம்-ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது,
தஸ்மாத் தே ப்ரஹ்மணி ஸ்திதா:-ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

பொருள் : மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

கண்ணாடி கரடுமுரடாயிருந்தால் அதன் மூலம் காணப்படும் பொருள்களெல்லாம் பின்னப்பட்டுத் தெரியும். கண்ணாடி ஸமமாயிருந்தால் அதன் மூலம் பொருள்களை உள்ளபடி காணலாம். காண்போன் காணப்படுபொருளுக்கிடையில் தூய கண்ணாடியிருந்தால் மெய்க் காட்சிக்கு அது தடையாவதில்லை. மனது விருத்தி என்னும் வேகத்தோடு கூடியிருந்தால் பிறப்பு இறப்புக்கு ஏதுவான பிரபஞ்சத்தை அது காண்கிறது. மனம் ஸம நிலையில் உறுதியாயிருந்தால் பொருளை அது உள்ளபடி காண்கிறது. மெய்ப்பொருளுக்கு பிரம்மம் மற்றொரு பெயர். அதன்கண் அசைவொன்றும் இன்மையால் அது யாண்டும் ஸமமாயுள்ளது. சுத்த சைதன்யம் விகாரப்படுவதில்லை. கூடுதல், குறைதல், மாறுதல் என்பன அதனிடத்தில்லை. ஆகையால் அது தோஷமற்றது. கேடில்லாதது அது ஒன்றே. ஸமநிலையில் நிலைத்திருப்பவர் அதன் காட்சி கண்டு அதனிடத்தே நிலைத்திருப்பவர் ஆகின்றனர். கேடின்மை பிரம்ம ஞானிகளிடத்தும் வந்தமைகிறது.

மாயையும் பிரம்மமும் முறையே ஓடும் பாம்பையும் சலனமற்றுக் கிடக்கும் பாம்பையும் ஒக்கும். கிரியா சக்தி மாயையாகும்; நிஷ்கிரியா சக்தி பிரம்மம்.

ஞானிகளிடத்துக் கேடில்லையென்று எப்படித் தெரிந்து கொள்வது? விடை வருகிறது:

20. ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித:

ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத்-விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும், அப்ரியம் ப்ராப்ய ச ந உத்விஜேத்-பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்,
ஸ்திரபுத்தி: அஸம்மூட: ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:-பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

பொருள் : விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம் இவையாவும் உடல் கூற்றோடு சம்பந்தப்பட்டவைகள். தேகத்தைத் தானென்று எண்ணுபவன் மனக் குழப்பமடைந்தவன். பிரம்ம திருஷ்டியிலேயே இருப்பவனுக்கு இத்தகைய சித்தவிருத்திகள் உண்டாவதில்லை.

காமமும் காசு ஆசையும் மனதை விட்டகலும்போது ஆத்மாவினிடம் வேறு என்ன தங்கியிருக்கும்? பிரம்மானந்தமே அங்குக்குடி கொண்டிருக்கும். பிரம்மசொரூபத்தில் நிலைபெற்றிருப்பதால் :

21. பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே

பாஹ்ய ஸ்பர்ஸேஷு-புறத் தீண்டுதல்களில், அஸக்தாத்மா ஆத்மநி-பற்றற்ற சாதகன் உள்ளத்தில், யத் ஸுகம் விந்ததி-எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்,
ப்ரஹ்ம யோக யுக்தாத்மா-(அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி, ஸ: அக்ஷயம் ஸுகம் அஸ்நுதே-அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்.

பொருள் : புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

புறத்தில் பொறிகள் வாயிலாக வரும் போக சுகங்கள் நிலையற்றவைகள். அவைகள் சிற்றின்பம் எனப்படுகின்றன. அகத்தில் சுத்தியடைந்த அந்தக்கரணம் ஆத்மானந்தத்தை அனுபவிக்கிறது. அது தேயாது தெளிவடைகிறபடியால் அதற்குப் பேரின்பம் என்று பெயர்.

சிலர் ஏற்கனவே விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அறிந்து கொள்வதற்கு அவர்களிடம் சில அடையாளங்கள் இருக்கிறது. சக்கரவாகம் என்னும் பக்ஷி எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும். ஏழு சமுத்திரங்களிலும் தண்ணீர் இருக்கின்றது. கங்கை, யமுனை முதலிய அநேக ஆறுகளிலும் தண்ணீர் நிறைந்துள்ளது. என்றாலும் அப்பறவை மழை நீரையன்றி இவை யொன்றினின்றும் தண்ணீர் அருந்தாது. எவ்வளவுதான் தாகத்தால் தொண்டை வறண்டு போயினும் மழை நீரைத் தவிர்த்து வேறு எந்த நீரையுமே அது அருந்தவே அருந்தாது. அதுபோல இவர்களும் கடவுளைப் பற்றியும் கடவுள் சம்பந்தப்பட்டவைகளைப் பற்றியுமன்றி வேறு எந்த விஷயங்களைப் பற்றியும் கேட்கவும் பேசவும் மாட்டார்கள்.

முந்தியது சிற்றின்பம் என்று ஏன் சொல்லப்படுகிறது? விளக்கம் வருகிறது :

22. யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:

ஸம்ஸ்பர்ஸஜா யே போகா:-புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ, தே ஹி து:கயோநய: ஏவ-அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும், ஆதி அந்தவந்த:-தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை), கௌந்தேய-குந்தி மகனே, 
புத: தேஷு ந ரமதே-அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

பொருள் : புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

மனிதனுக்கு வருகிற எல்லா துக்கத்துக்கும் காரணம் விஷய சுகத்தை நாடுவதாலேயாம். இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் தொடர்பு வைக்கும்பொழுது சுகம் ஆரம்பிக்கிறது. அர்த்தங்களை விட்டு அவைகள் விலகும்போது துக்கமாகப் பரிணமிக்கிறது. இடையில் மின்னல் போன்று சிறிது இன்பம் தென்பட்டது தான் மிச்சம். அறிவு இல்லாத விலங்குகளும் மாக்களும் அவைகளை நாடிச் செல்லுகின்றன. விவேகமுடையவன் அவைகளை அறவே விலக்கிவிடுகிறான்.

பாம்பைக் கண்டதும் மானஸதேவி! வாலைக்காட்டித் தலையை மறைத்துக்கொண்டு ஒதுங்கிப் போ என்று ஜனங்கள் சொல்லுவது வழக்கம். அதுபோல இந்திரிய சுகங்களைத் தூண்டும் விஷயங்களினின்றும் விலகியிருப்பது நல்லது. அவைகளில் அழுந்தி வருந்துவதனால் உண்டாகும் அனுபவத்தைக்காட்டிலும், அவைகளுடைய ஸஹவாசமே இல்லாது செய்து கொள்வது வெகு மேலானது.

ஆசையைப் போக்க எத்தகைய பிரயத்தனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

23. ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:

ய: இஹ ஏவ-எவன் இவ்வுலகத்திலேயே, ஸரீரவிமோக்ஷணாத் ப்ராக்-சரீரம் நீங்குமுன்னர், காம க்ரோத உத்பவம்-விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும், வேகம் ஸோடும் ஸக்நோதி-எழுச்சியை பொறுக்க வல்லானோ, ஸ நர: யுக்த:-அந்த மனிதன் யோகி, ஸ ஸுகீ-அவன் இன்பமுடையோன்.

பொருள் : சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.

மனிதன் உடலில் உயிர்வாழுமளவு காமம் அல்லது குரோதம் தலையெடுப்பது திண்ணம். சாகும் தறுவாயிலும் இவைகள் தோன்றவல்லவைகள். இன்பம் தரும் பொருள்களை இந்திரியங்களால் நுகர்வதால், கேட்பதால் அல்லது எண்ணுவதால் காமம் தலையெடுக்கிறது. குரோதம் அல்லது சினம் என்பது துன்பம் தரும் பொருள்களை இந்திரியங்களால் நுகர்வதால், கேட்பதால் அல்லது சிந்திப்பதால் தோன்றுகிறது. காமம் உள்ளத்தில் தடிக்கும்போது அது புறத்தில் முகமலர்ச்சியாகவும் மயிர்க்கூச்சாகவும் வடிவெடுக்கிறது. சினம் சிந்தையில் சீறியெழும்போது உடல் வியர்த்து நடுங்குகிறது; உதடு கடியுண்கிறது; கண் சிவக்கிறது. இத்தகைய விருப்புவெறுப்பின் விசையை அடக்குபவனே யோகி. அவனுக்குத் தன்னகத்துள்ள இன்பம் தானே உதயமாகிறது.

காமமும் காசு ஆசையும் உலகம் முழுவதையும் பாபத்தில் அமிழ்த்திவிட்டன. ஸ்திரீகளே லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால், உனக்கு அவர்களால் துன்பமுண்டாகாது.

ஆசை நசிக்காதிருக்கும் வரையில் ஈசனைக் காணமுடியாது.

எத்தகைய யோகி பிரம்மத்தில் நிலைத்திருந்து பிரம்மத்தை யடைகிறான்? பகவான் பதில் சொல்லுகிறார்.

24. யோऽந்த:ஸுகோ’ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி

ய: ஏவ அந்த:ஸுக-எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக, அந்தராராம:-உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், ததா ய: அந்தர்ஜ்யோதி:-அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ, ஸ: ப்ரஹ்மபூத:-அவன் தானே பிரம்மமாய், ப்ரஹ்மநிர்வாணம் அதிகச்சதி-பிரம்ம நிர்வாணமடைகிறான்.

பொருள் : தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

விஷயங்களில் சுகம் காணாது சுகத்துக்கு யதாஸ்தானமாகிய ஆத்மாவின்கண் அது காணப்பெறுகிறது. விளையாடி மகிழ்வூட்டும் பொருள் வெளியுலகில் இல்லாது ஆத்மாவின்கண்ணே அமைகிறது. ஞான வெளிச்சத்தை நாடி இந்திரியங்கள் வாயிலாக வெளியுலகில் செல்லாது ஆத்மா தன்னிடத்தே அதை அடைகிறது. சுருங்கச் சொல்லின் தான் நாடும் அனைத்தும் தன்னிடத்தே இருப்பதை சுவானுபவத்தில் காணும் யோகி தானே பிரம்ம சொரூபமாகி பிரம்ம நிர்வாணம் அல்லது முக்தியடைகிறான்.

உலகப்பற்று அதிகமுள்ள மனிதனுக்கு ஞானம் உதிக்காது. எவ்வளவுக்கு உலகப்பற்று குறைந்து இருக்கிறதோ அதற்கேற்றபடி ஞானமும் வளர ஆரம்பிக்கும்.

25. லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:

சிந்நத்வைதா-இருமைகளை வெட்டிவிட்டு, ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி, யதாத்மாந:-எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ, ருஷய: க்ஷீணகல்மஷா:-(அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து, ப்ரஹ்மநிர்வாணம் லபந்தே-பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

பொருள் : இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

ரிஷிகள் என்பவர்கள் தத்வதர்சனம் அடையப்பெற்றவர்கள். பற்றற்ற வாழ்க்கையால் அவர்களுக்குப் பூரண ஞானம் வருகிறது. பற்று இல்லை யெனினும் எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதற்கான உபாயங்களையெல்லாம் அவர்கள் கையாளுகிறார்கள். மனமும் இந்திரியங்களும் அடங்கப் பெறாமையினால் அவர்கள் அங்ஙனம் செயலில் ஈடுபடுபவர்கள் அல்லர்; முற்றிலும் தன்னடக்கமே வடிவெடுத்தவர்கள். ஆக, அவர்களுக்கும் பாபம் ஒன்றும் வந்தமைவதில்லை. பிரம்ம நிர்வாணம் அல்லது பேரானந்தப் பிராப்திக்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.

மேலும் அவர்களது மகிமை யாதெனில் :

26. காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்

காமக்ரோதவியுக்தாநாம்-விருப்பமும் சினமும் தவிர்த்து, யதசேதஸாம் விதிதாத்மநாம்-சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய, யதீநாம் அபித:-முனிகளுக்கு நாற்புறமும், 
ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே-பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

பொருள் : விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

யாண்டும் மோக்ஷமுளது என்பதன் பொருள் இங்கு இவ்வுடலத்தோடு இருக்கும்பொழுது அத்தகைய பரிபாகமுடைய துறவிகள் ஜீவன் முக்தர்களாக யிருக்கிறார்கள். இவ்வுடலத்தை விடும்பொழுது அவர்கள் விதேகமுக்தர்களாகிறார்கள். ஆக, எங்கும் எப்பொழுதும் அவர்கள் முக்தர்களே.

முக்தியின் பொருட்டு மனதை ஒருமுகப்படுத்தியாகவேண்டும். அதன் விவரம் வருகிறது.

27. ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ்
சக்ஷúஸ்சைவாந்தரே ப்ருவோ:
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா 
நாஸாப்யந்தரசாரிணௌ

28. யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:

பாஹ்யாந் ஸ்பர்ஸாந் பஹி ஏவ க்ருத்வா-புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி, 
சக்ஷú: ப்ருவோ: அந்தரே-புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி, நாஸாப்யந்தர சாரிணௌ-மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும், 
ஸமௌ க்ருத்வா ச-சமமாகச் செய்துகொண்டு.

யதேந்த்ரிய: மந: புத்தி:-புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி, விகத: இச்சா பய க்ரோத:-விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து, மோக்ஷபராயண:-மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற, ய: முநி: ஸ: ஸதா முக்த ஏவ-அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்.

பொருள் : புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;

பொருள் : புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி. (27-28)

ஓசை முதலிய வெளி விஷயங்களை எண்ணாது விட்டுவிடும் பொழுது அவைகள் புறத்தே வைக்கப்படுவனவாகின்றன. தியானத்தில் கண்கள் பாதி மூடப்பெற்றிருக்கும்போது அவைகள் அசைவதில்லை; புருவங்களுக்கிடையில் குவிவனபோன்று அவைகள் தென்படும். நாசியால் புறத்தே விடும் மூச்சுக்குப் பிராணன் என்றும் உள்ளே இழுக்கும் காற்றுக்கு அபானன் என்றும் பெயர். இங்ஙனம் பிராணாயாமத்தின் மூலம் சுவாசத்தின் போக்கு வரவு ஒழுங்குபடுத்தப்படுகிறது. மனதின் அமைதிக்கும் பிராண அபானனின் ஒழுங்கு முறைக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. வாயு ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்குகிறது. மனம் ஒடுங்குமிடத்து வாயு ஒடுங்குகிறது.

ஆசை, அச்சம், சினம் குடிகொள்ளுமிடத்து மனம் தத்தளிக்கிறது. அசையும் நீரில் நிழல் அல்லது பிரதிபிம்பம் நன்கு தென்படாது. அசையும் மனதில் ஆத்ம சொரூபம் தென்படாது. மனதுக்குத் தேக்கம் முதலில் உண்டாகவேண்டும். தியானம் அதைத் தொடர்ந்து கைகூடும்.

யாருடைய மனது தைலதாரை போன்று ஈசுவரனை நோக்கிச் செல்லுகிறதோ அம்மனிதன் முனி, அல்லது மனன சீலத்தையுடையவன். ஆத்ம சாக்ஷõத்காரம் பண்ணிக்கொண்டிருக்குமளவு ஒருவன் முக்தனாகிறான். பின்வரும் அத்தியாயம் முழுதும் இந்த இரண்டு சுலோகங்களுக்கு விளக்கமாகும். ஈசுவரனிடத்து மனதைத் திருப்புகிற முனி ஈசுவரனே எங்ஙனம் கருதவேண்டும்? விடை வருகிறது :

29. போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி

மாம் யஜ்ஞதபஸாம் போக்தாரம்-என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும், ஸர்வலோகமஹேஸ்வரம்-உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும், ஸர்வபூதாநாம் ஸுஹ்ருதம்-எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும், ஜ்ஞாத்வா ஸாந்திம் ருச்சதி-என்று அறிபவன் அமைதி அடைகிறான்.

பொருள் : வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்; எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.

யாகம், தபசு இவைகளைக் செய்விக்கும் கர்த்தாவாயிருப்பவரும், இவைகள் வாயிலாக யோகியால் அடையப்பெறும் தெய்வமாயிருப்பவரும் நாராயணனே. உலகம் முழுவதையும் அவர் ஆளுகிறார். அப்படிச் செய்வதால் அவரிடத்து அன்பு இல்லாதுபோய்விடவில்லை. கைம்மாறு கருதாது எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்கிறார் அவர். எல்லாருடைய உள்ளத்திலும் மன சாக்ஷியாக வீற்றிருந்து அவரவர் கர்மத்துக்கு ஏற்ற பலனை அவர் எடுத்து வழங்குகிறார். செயலுக்குத் தலைவனாயிருப்பது போன்று அறிவுக்கும் அறிவாய் இலங்குகின்றார் அவர். இவ்வுண்மையை அறிகின்றவர்களுக்கு மனச்சஞ்சலம் இல்லை. சாந்தி தானே வந்தமையும்.

இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஸந்யாஸயோகோ நாம பஞ்சமோऽத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸந்யாஸ யோகம் என்ற ஐந்தாம் அத்தியாயம்.

தொடரும்...


நன்றிவணக்கம் 
ஹரிமணிகண்டன்
 Harimanikandan.V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

No comments:

Post a Comment